மின் அழுத்தம் முதல் எலக்ட்ரிக் ஷாக் வரை.. மின் விபத்தை தவிர்ப்பது எப்படி.. சேலம் அதிகாரி விளக்கம்
சேலம்: மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி என்று சேலம் மின்வாரிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதன்படி மின்கலன்களை வாங்கும்போது சான்றளிக்கப்பட்ட சார்ஜிங் அமைப்புடன் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். சரியான மின்சார அவுட்லெட்டை பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடமுடியாத இடங்களில் வைக்க வேண்டும். மின்கலன்களில் கேபிள்களை இழுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பொதுவாகவே மின் விபத்தை தடுக்க மின் கம்பிகளுக்கு அருகே, உலோகப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, புதை மின் வடம் செல்லும் இடத்தில், நிலத்தை துளையிடுதல் அல்லது நிலத்தை தோண்டக்கூடாது, புதிய கட்டட பணி மேற்கொள்ளும்போது, அருகில் செல்லும் மின் கம்பிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். மின் கம்பத்திலோ, இழுவை கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. இடி அல்லது மின்னலின்போது, 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இழுவை கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடிக்கயிறு கட்டி, துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். இப்படி பல்வேறு விஷயங்கள் உள்ளன.

இந்நிலையில் சேலம் மின்ஆய்வாளர் ஜெயபிரபா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு மின் ஆய்வு துறை மூலம் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் இன்று (புதன்கிழமை) வரை தேசிய மின் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின்கலன்களை தொடர்ந்து பராமரிப்பு, ஆய்வு செய்ய வேண்டும். அதிக வெப்பம், தீ பிடிப்பது போன்றவை ஏற்படுவதை தடுக்கும் வகையில் காற்றோட்டம், தீ அணைக்கும் அமைப்புகள் இருக்க வேண்டும். மின்னழுத்தம் அதிகமாகவோ, குறைவாகவோ இல்லாமல் தானாக கட்டுப்படுத்தும் வசதியுடன் இருக்க வேண்டும்.
மின்கலன்களை வாங்கும்போது சான்றளிக்கப்பட்ட சார்ஜிங் அமைப்புடன் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். சரியான மின்சார அவுட்லெட்டை பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடமுடியாத இடங்களில் வைக்க வேண்டும். மின்கலன்களில் கேபிள்களை இழுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தவறி விழுவதுடன் கேபிள் சேதத்தையும் ஏற்படுத்துகிறது.
மின்கலன் கேபிள் அருகே எரியக்கூடிய பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடிய கூரை சோலார் பேனல்களில் தீ பற்றுதல் மின்கசிவு அபாயங்களை தவிர்க்க தீயாகும் நிலையை தடுக்கும் அமைப்பு, இடியொளி தடுக்கிகள், மின்சார அதிர்ச்சி தடுப்பு சாதனங்கள், கட்டமைப்பின் நிலை தன்மை மற்றும் உட்புகுதல் அமைப்புகள் போன்றவற்றை முறையாக ஆய்வு செய்து பராமரிப்புகளை மேற்கொள்வதன் மூலம் தீ பிடித்தல் மின் விபத்துகளை தவிர்க்கலாம்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications