இவருதான் அதிமுக விசுவாசியாச்சே! செங்கோட்டையனை அமைச்சரவையில் இருந்து ஜெ. நீக்கியது ஏன்? இபிஎஸ் கேள்வி
சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசி என்றால் 2016 ஆம் ஆண்டு அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் இருந்து மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனை நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நீக்கம் குறித்து ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன்.
கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அதிமுகவில் நான் தொடர விரும்புகிறேன். 2026 இல் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்ததற்காக என்னை அதிமுகவில் இருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது. நான் கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன்.
துரோகத்திற்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனில் அதனை தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும். தற்காலிக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி 53 ஆண்டுகள் காலம் கட்சியில் இருந்த என்னை நீக்கியது கேள்விக்குறியானது.
விதியின் கீழ் என்னை நீக்கவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனின் இந்த பேட்டியை மறுத்து எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 6 மாதங்களாக கட்சிக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டு வந்தார்.
அவர் கேட்பது பிரிந்து சென்றவர்கள் இல்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்கிறார்.
நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என பொதுக் குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக் குழு தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டால் என்ன நடவடிக்கை பாயும் என்பது 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் அவருக்குத் தெரியாதா?
ஜெயலலிதாவின் விசுவாசி என்கிறார், பிறகு அவரது அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையன் ஏன் நீக்கப்பட்டார். விசுவாசியை யாராவது நீக்குவார்களா? ஜெயலலிதாவால் நீக்கப்பட்டாலும் நான் ஆட்சிக்கு வந்ததும் செங்கோட்டையனை அமைச்சரவையில் சேர்த்தோம். அவருக்கு கட்சி பதவியையும் வழங்கினோம். ஜெயலலிதா இருந்திருந்தால் 2021 தேர்தலில் இவருக்கு சீட் கொடுத்திருக்க மாட்டார்.
நான் தற்காலிக பொதுச் செயலாளரா? தேர்தல் ஆணைய கோப்புகளில் என்ன இருக்கிறது, அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்பதை அறிந்து கொள்ள சொல்லுங்கள். ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார் செங்கோட்டையன். அவர் வரும் 2026 தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவதுதான் அவர்களின் விருப்பமாக உள்ளது.
சட்டசபையிலும் சரி கட்சி கூட்டங்களிலும் சரி திமுகவை எதிர்த்து செங்கோட்டையன் பேசியதே இல்லை. அத்திக்கடவு- அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் எல்லா கட்சிகளும் இணைந்து நடத்தியதால் ஜெயலலிதாவின் புகைப்படத்தை போடவில்லை. அதை இவர் பெரிதாக பேசி அந்த நிகழ்ச்சிக்கு வருவதையே தவிர்த்தார்.
ஆனால் அண்மையில் திமுக நடத்திய இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் ஜெயலலிதா புகைப்படமே இல்லையே, அந்த விழாவுக்கு இவர் ஏன் போனார்? இதிலிருந்தே அவர் திமுகவின் பி டீம் என தெரிகிறது.
கூவத்தூரில் பொதுச் செயலாளராக்க தன்னிடம்தான் சசிகலா பேசினார் என கூறுவதிலிருந்தே செங்கோட்டையனின் நினைப்பு என்ன என்பது தெரிகிறது. செங்கோட்டையன் வன்மத்துடன் செயல்பட்டு வரும் நிலையில் அவரை கட்சியில் எப்படி வைத்திருப்பது? அதிமுகவுக்கு துரோகம் செய்ததால் செங்கோட்டையனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கட்சிக்காக உழைக்காமல் துரோகம் இழைத்தால் இந்த நிலைதான் ஏற்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications