நீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
Recommended Video
சேலம்: நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இதுகுறித்து தகவலறிந்ததை அடுத்து உதித் சூர்யாவும் , அவரது தந்தை வெங்கடேசனும் கைதாகினர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், கைதான வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். இதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த புரோக்கர் ஜார்ஜ்தான் ஆள்மாறாட்டம் செய்வதற்கான உதவிகளை செய்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் ஜார்ஜை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கூறிய தகவலின் பேரில் மாணவர் பிரவீண், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிட் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதுபோல் அபிராமி மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இர்பான் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்ததாக தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பே இர்பான் மொரீஷியஸ் தப்பிவிட்டார். இதனிடையே இர்பானின் தந்தை மருத்துவரான முகமது சஃபியை கைது செய்தனர். இந்த நிலையில் மொரீஷியஸ் சென்ற இர்பானை போலீஸ் தேடுவதை அறிந்து அங்கு விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இர்பான் சேலம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவா முன்பு இன்று சரணடைந்தார். அவரை வரும் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications