உஷார்.. மேட்டூர் அணையில் 1.28 லட்சம் கனஅடிநீர் திறப்பு.. 11 மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கை
சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.28 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 11 மாவட்டங்களுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பியுள்ளன.
அங்கிருந்து காவிரியில் அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்துக்கு
வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் அதிக கனஅடிக்கு மேல் நீர்வரத்து உள்ளது.

நிரம்பிய மேட்டூர் அணை
இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயரத் தொடர்ந்தது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் வந்ததால் அணை வேகமாக நிரம்பியது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அணை முழுகொள்ளவான 120 அடியை எட்டியது.

நீர் திறப்பு அதிகரிப்பு
இதையடுத்து பூஜை செய்யப்பட்டு உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. நேற்று இரவு நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்று காலை நிலவரப்படி காவிரியில் வினாடிக்கு 1.23 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரின் அளவு தற்போது அதிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி காவிரியில் திறக்கும் நீரின் அளவு 1.28 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
இதனால் மக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துணிதுவைக்க, குளிக்க, செல்பி எடுக்க யாரும் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பணி
மேலும் காவிரி கரையோரம் உள்ள கிராமங்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணிகள் நடந்து வருகின்றனர். அதோடு, போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications