எடப்பாடியாரை வழிநடத்துவது எம்ஜிஆர், ஜெ. ஆன்மா.. யாராலும் காப்பாற்ற முடியாது - உதயகுமார் பரபர!
சேலம் : எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா, எடப்பாடியாரை வழிநடத்துகிறது. திமுகவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியால் தான் முடியும் என ஆர்பி உதயகுமார் பேசினார்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று திமுக அரசையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்துப் பேசியுள்ளார்.
சாக்கு மூட்டையில் பணம்.. 'அந்த பலூன்காரரை நம்பி போனவர் கதி’ - ஓபிஎஸ்ஸை கிண்டல் செய்த ஆர்பி உதயகுமார்
முதல்வர் செய்யவேண்டியதை எல்லாம்
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி கொண்டலாம்பட்டியில், அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் எம்.எல்.ஏவுமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றுப் பேசினார். அப்போது பேசிய அவர், சேலத்தை உலக அளவில் பேச வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் செய்யவேண்டிய திட்டங்களை எதிர்க்கட்சி தலைவராக இருந்து எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நடந்தாய் வாழி காவேரி, காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிவித்தார்.
எல்லாம் தலைகீழா நடக்குது
மேலும் பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து எத்தனை அழுத்தம் இருந்தாலும் மின் கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்களுக்கு சுமையை திணிக்கக் கூடாது என்று எடப்பாடியார் கவனமுடன் இருந்தார். ஆனால் திமுக ஆட்சியில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் எப்போது வந்தாலும் இரட்டை இலை தான் வெற்றி பெறும். தொண்டர்கள் களப்பணியில் கவனம் செலுத்துங்கள் என்றார்.
விமர்சித்தால் ரெய்டு?
தொடர்ந்து பேசிய ஆர்பி உதயகுமார், "அதிமுக ஆட்சியில் சிறந்த காவல்துறையாக இருந்த தமிழக காவல்துறை, தற்போது சட்டம் ஒழுங்கில் மோசமாக இருக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. திமுக அரசை விமர்சித்தால் சோதனை நடத்துகின்றனர். எத்தனை வழக்கு போட்டாலும் சட்டப்படி சந்திப்போம்.
மூடு விழா
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக் திட்டத்தை தற்போது முழுமையாக மூடிவிட்டனர். இதேபோன்று மகளிருக்கு இருசக்கர வாகனத்திற்கு மானியம் வழங்கும் திட்டம், பட்டதாரி பெண்களின் திருமணத்தின் போது வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், ஏழை மக்கள் தரமான உணவருந்திட தொடங்கிய அம்மா உணவகம் திட்டம் என அனைத்தும் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.
குறைத்து வருகிறார் ஸ்டாலின்
2011க்கு முன்பு முதியோர் உதவித்தொகை 1200 கோடி வழங்கினார்கள். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் 4500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஒரே உத்தரவில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டது. அதனை திமுக அரசு குறைத்து வருகிறது.
அடுத்தடுத்து ஒவ்வொருவராக
சுப்புலெட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் திமுக ஆட்சியில் லஞ்சம் இல்லாத துறை இருந்தால் கூறுங்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். திமுகவில் ஜனநாயகம் இல்லை. அதனால்தான் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக திமுகவில் இருந்து வெளியேற உள்ளனர்.
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மா
அதிமுக மனித புனிதரால் தொடங்கப்பட்ட, தெய்வசக்தி பெற்ற இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா, எடப்பாடியாரை வழிநடத்துகிறது. திமுகவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியால்தான் முடியும்" எனத் தெரிவித்தார்.