"அயலி" பார்த்தேன்.. பெண்கள் கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்கியதே திராவிட மாடல் தான்.. பொன்முடி பேச்சு!
அயலி இணையத் தொடருக்கு அமைச்சர் பொன்முடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சேலம்: அண்மையில் வெளியாகிய அயலி இணையத் தொடர் குறித்து அமைச்சர் பொன்முடி பாராட்டி பேசியுள்ளார். ஊர்க்கட்டுப்பாடுகளை தகர்த்து பெண்களை கல்வி கற்க முயல்வது சிறப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், இவையனைத்தையும் மாற்றியமைத்தது தான் திராவிட மாடல் என்று பொன்முடி கூறியுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கலைஞர் ஆய்வு மையக் கட்டுமானப் பணிகளை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் நடந்த விழாவில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், வகுப்புக்கு ஒரு பெண் மட்டுமே பயின்று வந்த காலம் மாறி, தற்போது 80 சதவிகிதம் பெண்கள் பயில்வதற்கு காரணம் திராவிட இயக்கம் தான்.

பொன்முடி பேச்சு
அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதியின் கொள்கைகளை இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். 14 வயதில் முரசொலி நாளிதழை ஆரம்பித்து தமிழுக்கு பாடுபட்டவர் கருணாநிதி. அவரின் வழியில் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினும் நடக்கிறார்.

பேனா நினைவு சின்னம்
கடலில் பேனா வைப்பது இன்றைக்கு பிரச்சினையாக பேசப்படுகிறது. அந்த பேனா இல்லையென்றால் நாம் படித்திருக்கவே முடியாது. தலை நிமிர்ந்து நாமெல்லாம் இருக்க அந்தப் பேனாவே காரணம். 14 வயதில் தொடங்கி கடைசி வரை கருணாநிதியின் பேனா எழுதியதால் தான் எங்களைப் போன்றவர்கள் கல்லூரிகளில் படிக்க முடிந்தது.

அயலி பற்றி பேச்சு
அண்மையில் அயலி பார்த்தேன். தமிழ்நாட்டின் வரலாறே உருவாகி இருக்கிறது. அந்தக் கதையில் பெண் குழந்தைகளை படிக்க விடாமல் ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகளை தகர்த்து பெண்கள் கல்வி கற்க முயல்வது சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அவையனைத்தனையும் மாற்றியமைத்து எல்லோரும் கல்வி பயிலும் வாய்ப்பினை உருவாக்கியது திராவிட மாடல்தான்.

புத்தகம் படித்தால் போதாது
தமிழ்நாடு என்பதே கொஞ்சம் பேருக்கு பிடிக்கலை. மாணவிகள் தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். வெறும் புத்தகம் மட்டுமே படிக்காமல் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால் தான் சரியாக இருக்கும். எல்லோரும் ஒருங்கிணைந்து இந்தப் பணியை செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கென தனியாக கல்விக் கொள்கையை வகுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 5ம் வகுப்பு, 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது.

இருமொழிக் கொள்கை
தமிழ்நாடு தமிழ் உணர்வு என்று செயல்பட வேண்டும். வெளிநாட்டிற்கு ஆங்கிலம், உள்ளூருக்கு தமிழ் என இரு மொழிகள் மட்டுமே போதும். இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டிற்கு போதுமானது. இதை எதிர்த்து எந்த திட்டம் வந்தாலும் அதை மீறி இருமொழிக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின நிச்சயம் செயல்படுத்துவார். எங்கு சென்றாலும் மொழி உணர்வு, நாட்டு உணர்வு இருக்க வேண்டும். அனைவரும் சமம், ஆண் பெண் சமம் என்பதை ஏற்று அனைவருக்கும் பரப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications