இது தான் தமிழ்நாடு! கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில்.. ஓடி ஓடி உதவிய இஸ்லாமியர்கள்
சேலம்: ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பின்னர் சேலம் திருமணிமுத்தாறு கரையில் இருக்கும் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இன்று குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடிநீர் வழங்கி வரவேற்றது மக்கள் மனங்களை குளிர செய்திருக்கிறது.
சேலத்தின் சிறப்புகளில் திருமணிமுத்தாறும் ஒன்று. சேர்வராயன் மலைத்தொடர் மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகும் இந்த ஆறு, சேலம் மாவட்டத்தின் பிரதான ஆறாகும். இம்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இது காலங்காலமாக பாதுகாத்து வருகிறது. மஞ்சவாடி கணவாய் அருகே உருவாகும் இது சேலம் மாநகர், நாமக்கல் என வழி நெடுக ஏராளமான ஏரிகளை நிரப்பி செல்கிறது. இறுதியாக தடுப்பணை அடைந்து அங்கும் தேங்கி நிற்காமல் 120 கி.மீ பயணத்தின் முடிவில் நன்செய் இடையார் என்னும் இடத்தில் காவிரியில் கலந்து தஞ்சையில் நெல் உற்பத்தி ஆவதற்கும் உதவி செய்கிறது.

வற்றாத ஜீவநதியாக வாழ்வளித்த இந்த திருமணிமுத்தாறின் கரையில் காவல் தெய்வமாக 500 ஆண்டுகளுக்கு முன்னர் சேர சிற்றரசர்களால் உருவானள்தான் கோட்டை மாரியம்மன். எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னரும் திருமணிமுத்தாறில் தலை நனைத்து இக்கோயிலின் படியேறி அம்மனை வழிபடுதல் என்பது அக்காலம் தொட்டு தொடர்ந்து வரும் பழக்கமாகும். தற்போது திருமணிமுத்தாறு மாசடைந்திருப்பதால் இந்த வழக்கு மெல்ல மறைந்துபோனது. அதேபோல கோயிலும் கொஞ்சம் கொஞ்சமாக தனது பொலிவை இழந்து வந்தது.
இதை சீரமைத்து தர வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பிய நிலையில், தமிழ்நாடு அரசு ரூ.4.67 கோடியை நிதியாக ஒதுக்கியது. கடந்த 2016ம் ஆண்டு இந்த நிதியை கொண்டு திருப்பணிகளும் தொடங்கப்பட்டன. கோயிலின் பழமை மாறாமல், முன்பு இருந்ததை விட இன்னும் சிறப்பாக சிற்பங்களும், தூண்களும் வடிவமைக்கப்பட்டன. குறிப்பாக மேற்கு வாசலில் 21 அடி உயரத்தில் இருக்கும் அம்மன் சிலை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.
இப்படியாக கோயில் குடமுழுக்குக்கு தயாரானது. கடந்த 18ம் தேதி முளைப்பாலிகை இடுதலுடன் குடமுழக்கு விழா கோலாகலமாக தொடங்கியது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழக்கு நடைபெறுவதால் வெளி மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் இருந்த உற்றார் உறவினர் சேலத்தை அடைந்தனர். சேலம் விழாக்கோலம் பூண்டது. இன்று காலை சரியாக 8.30 மணியளவில் பெரிய மாரியம்மனுக்கும், மதுரை வீரனுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவை மற்றொரு சம்பவமும் நெகிழ்ச்சியானதாக மாற்றியிருக்கிறது. அதாவது 500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடிநீரை விநியோகித்திருக்கிறார்கள். சேலம் ஜாமியா மஜித் முத்தவல்லி எஸ்.ஆர்.அன்வர் தலைமையில் இஸ்லாமியர்கள் இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெயரளவுக்கு இல்லாமல் குடமுழுக்குக்கு வந்த 20 ஆயிரம் பக்தர்களுக்கும் இவர்கள் குடிநீர் பாட்டில்களை விநியோகித்தனர். இஸ்லாமியர்களின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications