ஆதாரமே இல்லாம நாம் தமிழர் கட்சியினரிடம் என்ஐஏ சோதனை! நான் உயிருடன் இருக்கும் வரை.. சீமான் உருக்கம்
சேலம்: ஆதாரமே இல்லாமல் நாம் தமிழர் நிர்வாகிகளை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர் என்றும் நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சியை யாராலும் உடைக்க முடியாது என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஓமலூர் அருகே வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட 2 பேர் என்ஐஏ அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தனர்.

அதில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ரகசிய தொடர்பு கொண்டு பல 100 கோடி நிதியை சட்டவிரோதமாக பெற்றதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழகத்தில் ஆயுத போராட்டத்தை நடத்தவும் இதற்காக வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து நிதி உதவி பெற்றதாகவும் இந்த ஆயுத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பின்னணியில் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
அதன் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள், வெளிநாட்டுநிதி தொடர்பான பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சேலம் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு சேலம் மாநகர், அஸ்தம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஆஜராக வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ஆதாரம் இல்லாமல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் தற்போது என்ஐஏ சோதனை செய்தது ஏன்? என்ஐஏ விசாரணைக்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம்.
நாம் தமிழர் கட்சியை யாராலும் உடைக்க முடியாது. நான் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சி இருக்கும் என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications