கட்சியில் இருந்து நீக்குவதா? பொதுச்செயலாளர் சசிகலாதான்.. ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு அதிமுக நிர்வாகி நோட்டீஸ்
சேலம்: அதிமுகவில் இருந்து தம்மை நீக்கியதற்கு உரிய விளக்கம் தரக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாக்கு மாஜி அதிமுக நிர்வாகி எடப்பாடி சுரேஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதிமுகவை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்பதில் சசிகலா படுமும்முரமாக இருக்கிறார். இதுவரை நூற்றுக்கணக்கான ஆடியோ உரையாடல்களை வெளியிட்டு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அப்படி சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத சசிகலா, நேற்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.

அப்பல்லோ பரபரப்பு
அப்போதுதான் எடப்பாடி பழனிசாமியும் மதுசூதனனை பார்க்க அப்பல்லோ சென்றிருந்தார். எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில் சசிகலாவை நேருக்கு நேர் சந்திக்காமல் சட்டென புறப்பட்டு சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் சசிகலா இப்படித்தான் ஒவ்வொரு நாளும் பரபரப்பை கிளப்பி வருகிறார்.

கட்சி நிர்வாகி நீக்கம்
இந்த நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் இருந்து பேசியதற்காக அதிமுகவில் இருந்து கடந்த 5-ந் தேதி எடப்பாடி சுரேஷ் என்ற நிர்வாகி நீக்கப்பட்டார். சேலம் மாவட்ட மீனவர் அணி செயலராக இருந்து வந்தார். எடப்பாடி சுரேஷ் நீக்கப்பட்ட அறிவிப்பை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் வெளியிட்டிருந்தனர்.

வக்கீல் நோட்டீஸ்
இப்போது எடப்பாடி சுரேஷ் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அதிமுகவில் இருந்து தொண்டர்களை நீக்குவதற்கு கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்பதுதான் கட்சி விதி; அதனால் தம்மை அதிமுகவில் இருந்து நீக்குவதற்கு ஓ.. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் உரிமை இல்லை. தம்மை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று இப்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.

வழக்கு போடுவோம் என வார்னிங்
அத்துடன் தம்மை நீக்கிய அறிவிப்பை 15 நாட்களுக்குள் திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனவும் எச்சரித்துள்ளார். எடப்பாடி சுரேஷ். ஏற்கனவே தம்மை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
Recommended Video

சசிகலாவின் புதிய ஆயுதம்?
இந்த நிலையில் தமது நீக்கப்பட்ட ஆதரவாளர்கள் மூலம் அடுத்தடுத்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பதுதான் சசிகலா தரப்பின் திட்டமாம். இனிவரும் நாட்களில் அதுதான் நடக்கப் போகின்றனர் சசிகலா அணி சீனியர் பிரமுகர்கள்.












Click it and Unblock the Notifications