இங்க பாருங்க ட்விஸ்டை.. திமுக பிரபலத்தை வாயார புகழ்ந்த பாமக எம்எல்ஏ!
சேலம்: சேலத்து சிங்கம் என்றால் அது வீரபாண்டி ஆறுமுகம் தான் என்றும் அவருடன் தன்னை ஒப்பிடுவது சரியாக இருக்காது எனவும் கூறியிருக்கிறார் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள்.
வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர் மீது இன்னும் அதே மரியாதை வைத்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் பாமக எம்.எல்.ஏ. அருள். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வீரபாண்டி ஆறுமுகம் மலை என்றும் அவருடன் ஒப்பிடும் போது தாம் ஒரு சிறிய மண் கட்டி எனவும் கூறியிருக்கிறார். தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தன்னை சேலத்து சிங்கம் என கட்சியினர் புகழ்ந்து போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பதை பார்த்தால் அது போல் என்னை குறிப்பிட வேண்டாம் என கூறிவிட்டு தான் வருவேன் என்றும் அன்றும் இன்றும் என்றும் சேலத்து சிங்கம் என்றால் அது வீரபாண்டியார் தான் எனவும் புகழாரம் சூட்டியிருக்கிறார் அருள் எம்.எல்.ஏ.
இதற்கு காரணம் கட்சி பேதமின்றி கோரிக்கை மனுவுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு காரியம் சாதித்துக் கொடுத்தவர் வீரபாண்டி ஆறுமுகம். திமுகவின் இரண்டாம் கட்ட முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். கருணாநிதியிடமே நேருக்கு நேர் கேள்வி எழுப்பக் கூடிய இடத்தில் இருந்தவர்.
வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பிறகு சேலத்தில் அரசியல் செய்து வந்த அவரது இரண்டாவது மகன் ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். இப்போது வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் பிரபு திமுக இளைஞரணி மாவட்ட நிர்வாகியாக உள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்தவரை திமுகவுக்கும் பாமகவுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை தூதுவராக இருந்தார் என்பதும் ராமதாசுடன் நெருக்கமாக திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications