கோர்ட் வளாகத்திலேயே ரவுடிக்கு "ஸ்கெட்ச்.." குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்.. சேலத்தில் பரபரப்பு
சேலம்: சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு வந்த பிரபல ரவுடி ஜான் என்பவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து 10க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். காரில் ஏற மறுத்த ரவுடி ஜானை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் காரில் ஏற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான். இவர் மீது அடிதடி, கொலை வழக்கு, கஞ்சா விற்பனை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் மீது 2 கொலை வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கஞ்சா வழக்கில் ரவுடி ஜான் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 55 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த ரவுடி ஜான் கடந்த சனிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார்.

அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் 60 நாட்கள் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று இவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மனைவி சரண்யாவுடன் வந்திருந்தார். அதாவது ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு நெப்போலியன் என்பவரை கொலை செய்த வழக்கில் வாய்தாவுக்காக சேலம் ஒருங்கிணை நீதிமன்றத்திற்கு ரவுடி ஜான் வருகை தந்திருந்தார்.
3வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் ஆகிவிட்டு ரவுடி ஜான் நீதிமன்றத்திற்கு வெளியே வந்தார். நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த தனது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தார். தொடர்ந்து, தான் வந்த காரில் ஏறி வீட்டுக்கு செல்ல இருந்தார். அப்போது திடீரென ரவுடி ஜானை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். காரில் இருந்து கீழே இறக்கி போலீசார் பிடித்து சென்றனர். அப்போது என்னை ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேட்டபடி ரவுடி ஜான் வந்தார்.
ஆனால் போலீசார் எதுவும் கூறாமல், காரில் ஏறு.. என்று அழைத்து சென்றனர். அப்போது எதற்காக என்று கூறினால் தான் வருவேன் என்றும்.. இல்லயெனில் வரமாட்டேன் என கூறினார். மேலும் போலீசார் பிடியில் இருந்து நழுவி ஓட முயன்றார். அவரது மனைவி சரண்யாவும் எனது கணவரை விட்டுவிடுங்கள் என்று கூறியபடி ஓடி வந்தார். ஆனால் அங்கிருந்த 10 க்கும் மேற்பட்ட போலீசார், ரவுடி ஜானை குண்டுக்கட்டாக தூக்கி சென்று காரில் ஏற்றிச் சென்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த ரவுடியை 10 க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காரில் அழைத்து சென்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் 60 நாட்கள் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதன் காரணமாக அவர் இன்று கையெழுத்து போடாமல் வந்ததற்காக அவரை போலீசார் அவசர அவசரமாக அழைத்து சென்றனரா? இல்லை வேறு வழக்கில் கைது செய்தனரா? என்பது தெரியவில்லை. இதற்கிடையே ரவுடி ஜானின் மனைவி சரண்யா, என் கணவரை என்கவுண்டர் செய்வதற்காக தான் இப்படி அழைத்து செல்கிறார்கள் என்று போலீசார் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications