ஏழ்மை மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம்.. சேலத்தில் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ராகுல் காந்தி சூளுரை
சேலம்: ஏழ்மை மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்போகிறோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில், இன்று மதியம், 2.30 மணியளவில் நடைபெற்ற, காங்கிரஸ், திமுக பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
பண மதிப்பிழப்பு குறித்து யாரிடமும் மோடி ஆலோசிக்கவில்லை. கேட்டிருந்தால் 12 வயது குழந்தை கூட, இது தவறான திட்டம் என கூறியிருக்கும். ஆனால், கோடிக்கணக்கான மக்களின் கருத்துகளை கேட்டறிந்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம்.
15 பேரின் நலனுக்காக ஆட்சி செய்கிறார் மோடி.. லிஸ்ட் போட்ட ராகுல்.. கிருஷ்ணகிரியில் அதிரடி பேச்சு!
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
காங்கிரஸ் கட்சி, நாட்டிலுள்ள, ஏழ்மை மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்போகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து தமிழகத்தில் வறுமையை ஒழிப்போம். ஆயிரக்கணக்கான கோடிகளை அம்பானி, அதானிகளுக்கு மோடி கொடுத்தார். நாங்கள் ஏழைகளுக்கு பணத்தை கொடுக்கப்போகிறோம்.
72,000 பணம்
ஆண்டுக்கு 72,000 பணத்தை ஏழைகள் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளோம். நாட்டிலுள்ள 20 சதவீத ஏழை மக்கள் இதனால் பலன் அடைவார்கள். ஏழைகளுக்கு நிதி உதவி வழங்குவது எந்த நாட்டிலும் இல்லாத புரட்சிகர திட்டமாகும். இந்த பணம் பெண்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
மேட் இன் சீனா
லோக்சபா, ராஜ்யசபா, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம், இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேக் இன் இந்தியா என்ற வெற்று அறிவிப்பைதான், மோடி சொல்லி வந்தார். ஆனால், நீங்களே யோசியுங்கள். உங்கள் கைகளில் உள்ள செல்போன்கள், அணியும், சட்டை, ஷூக்கள் அனைத்துமே சீனாவில் தயாரானவை. ஆனால், காங்கிரஸ் ஆட்சி, உண்மையிலேயே இந்தியாவிலும், தமிழகத்திலும் பொருட்களை தயாரிக்கும்.
|
பணிகள் நிரப்புவோம்
22 லட்சம் வேலைவாய்ப்பு காலியாக உள்ளது. ஆனால் 45 வருட காலத்தில் மிக அதிகமாக வேலையில்லா திண்டாட்டம் உள்ளபோதிலும், அதற்கு பணியாட்களை நிரப்புவதில் மோடி தோல்வியடைந்துள்ளார். ஆனால், காங்கிரஸ் அரசு ஒரே வருடத்தில், இந்த வேலைவாய்ப்புகளை பூர்த்தி செய்யும்.
ஒரே கருத்துள்ள கூட்டணி
தமிழ்நாட்டின் பண்பாட்டை பாதுகாக்க நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். எங்கள் கூட்டணி கட்சிகள், ஒரே கருத்து உடையவை. அதிகார பரவலாக்கலை விரும்புகிறோம். இந்தியா, மாநிலங்களில் இருந்தும், மாநகரங்கள், கிராமங்களில் இருந்து நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். இந்தியா பிரதமர் அலுவலகத்திலிருந்து நடத்தப்பட வேண்டும் என நினைக்கவில்லை. நாக்பூரிலிருந்து தமிழகம் வழிநடத்தப்பட கூடாது என விரும்புகிறோம்.
ஸ்டாலின் முதல்வர்
வரலாற்றை படித்தவராக இருந்தால், தமிழர்களை அடக்கி ஒடுக்க முடியாது என்பதை மோடி அறிந்து கொள்ள முடியும். திமுக-காங்கிரஸ் கூட்டணி, தமிழர் கூட்டணி என்பதையும் மோடி உணர்வார். இந்தியாவின் எதிர்காலத்தை மட்டும் பொருத்தது அல்ல, தனி நபர் மரியாதையை காப்பாற்றவும், மோடியை தோற்கடிக்க வேண்டியது அவசியம். ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். இந்த மேடையில் ஸ்டாலினும் அமர்ந்திருந்தார்.