அடுத்த அதிரடி.. பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேருக்கு சம்மன்.. தீவிரமாகும் விசாரணை
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் தான் விசாரணைக்கு ஆஜராகும்படி பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் உள்பட 5 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி விதிகளை மீறி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோரின் பெயர்கள் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் இந்த பவுண்டேஷன் மூலம் அரசுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக கருப்பூர் போலீசார் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் உள்பட 5 பேர் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பில் உள்ள பேராசிரியர் விஸ்வநாத மூர்த்தி, பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி உள்பட 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் நாளை காலை 10.30 மணிக்கு போலீஸ் முன்பு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். இதனால் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications