சேலம் இளவரசிக்கு திருமணம் கடந்த உறவு.. தண்ணீர் தொட்டியில் மகன்கள் சடலம்! அப்பா இப்போ ஆஸ்பத்திரியில்
சேலம்: சேலம் மாவட்டம் அத்தனூர்பட்டியில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று விட்டு தலைமறைவான பெண்ணை வாழப்பாடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான இளவரசி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி தினசரி கணவர் விஜயகுமார் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இளவரசி இரண்டு குழந்தைகளை கொலை செய்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியம்பாளையத்தைச் சேர்ந்த 40 வயதான விஜயகுமாருக்கும், 34 வயதான இளவரசிக்கும் விக்னேஸ்வரன், சதீஷ்குமார் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
விக்னேஸ்வரன் தற்போது தான் முதல் வகுப்பை முடித்து இரண்டாம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எட்டு மணி இருக்கும் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் போட்டு கத்தினார் இளவரசி. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து என்ன நடந்தது என கேட்டபோது தனது மகன்கள் இருவரும் வீட்டின் அருகே இருந்த 10 அடி ஆழ தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டதாக கூறி கதறினார்.

மேலும் தொட்டியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த இளவரசியை மீட்டதோடு தொட்டியில் மூழ்கி இருந்த இரண்டு குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து வாழப்பாடி போலீசார் தகவல் அறிந்து வந்து இளவரசியிடம் விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் இளவரசி ஏதோ மறைத்துப் பேசுவது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது இளவரசியே இரண்டு குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வந்தது. விஜயகுமாரும் இளவரசியும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இளவரசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞனுக்கும் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டிருக்கிறது. இதனை தெரிந்து கொண்ட விஜயகுமார் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். நேற்று முன்தினம் கொலை நடந்த போது விஜயகுமார் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அந்த இளைஞருடன் தொடர்பை கைவிடாவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் தற்கொலை முடிவு எடுத்த இளவரசி இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார். இதை அடுத்து 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தைகளை வீசியுள்ளார். இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் இளவரசியும் குதித்து இருக்கிறார். ஆனால் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர் அலறியதால் அருகில் இருந்தோர் அவரைக் காப்பாற்றி இருக்கின்றனர். கள்ளக்காதலை கணவன் கண்டித்ததால் தாய் இரண்டு மகன்களை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே மகன்கள் இறந்த தகவலை கேட்டு விஜயகுமார் ஆஸ்பத்திரிக்கு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்திருக்கிறார். அப்போது மற்றொரு வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விஜயகுமாரும் அவரது உறவினரும் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications