ஸ்டாலினை பார்க்க பாவமா இருக்கு… வடிவேலு பாணியில் முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
சேலம்: ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருப்பதாக வடிவேலு பாணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி இன்று, நாமக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து சேந்தமங்கலத்தில் பிரசாரம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ஓமலூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி,

கூட்டணியில் ஒற்றுமை இல்லை
திமுகவின் கூட்டணியிலே ஒற்றுமை இல்லாதபோது, அந்த கூட்டணியால் எப்படி மத்தியில் நிலையான ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார். வேளாண் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம், போக்குவரத்து மற்றும் உள்ளாட்சி துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்.

பார்க்க பாவமாக உள்ளது
சட்டம், ஒழுங்கு சரியாக இருப்பதால் தான், ஸ்டாலினால் இன்று நடைபயிற்சி செல்ல முடிவதாகவும், மதுரைக்குள் சுதந்திரமாக சென்று வருவதாகவும் தெரிவித்தார். அதோடு, திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் தன்னை பற்றியே பேசி வருவதாக கூறிய முதலமைச்சர், அவரை பார்க்க பாவமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கே.டி, மண்புழு என்று பேசுவதா?
முதலமைச்சரை கே.டி, மண்புழு என்று பேசுவதா? என்று கேள்வி கேட்ட முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் தவறாக பேசினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், மக்களை குழப்பி தி.மு.க வாக்குசேகரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

கதை பேசுகிறார்
முன்னதாக, தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாது என்றார். அ.தி.மு.க சாதனைகளை சொல்லி வாக்குசேகரிக்கும் வேளையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெறும் கதைகளை மட்டுமே பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications