சேலம் வழிப்பறி சம்பவத்தில் திடீர் திருப்பம்.. முன்விரோதத்தால் தாக்குதல் நடந்ததாக போலீசார் விளக்கம்
சேலம்: சேலம் பஸ் நிலையம் அருகே இன்று காலை நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை, பைக்கில் வந்த 3 பேர் கும்பல் வழிமறித்து அடித்து தாக்கிவிட்டு செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். இதில் தன் தோழியை இன்ஸ்டாகிராமில் போலி ஐடி வழியாக தொல்லை கொடுத்ததால் தாக்கியதாக 3 பேரும் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பூலாங்குளம் அருகே உள்ள கோவிலூற்று பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சுரேஷ் (30). தச்சுத் தொழிலாளியான இவர் சேலத்தில் உள்ள தனது நண்பரிடம் வேலை கேட்டு இன்று காலை அரசு பஸ்சில் வந்தார்.

தொடர்ந்து காலை 7 மணி அளவில் வழி தெரியாமல் சுற்றித் திரிந்த அவர், சேலம் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள ஓமலூர் சாலையில் உள்ள இரடுக்கு மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சுரேஷை சரமாரியாக தாக்கியது.
இதனால் நிலைகுலைந்த அவர் கதறினார். தொடர்ந்து சுரேஷிடம் இருந்த செல்போனும் ரூ.2 ஆயிரம் பணமும் அந்த கும்பல் பறித்து விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
பின்னர் பட்டப்பகலில் வாலிபரிடம் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை அவர்களது மோட்டார் சைக்கிள் எண்களை வைத்து தேடி வருகின்றனர். மேலும் சேலத்தில் இன்று அதிக போக்குவரத்து உள்ள மேம்பாலத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக முன்விரோதத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதத்தால் தாக்குதல் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பிடிபட்ட ஆதிரிப்பட்டி இளைஞர்களான ராமகிருஷ்ணன், வினித் குமார், பிரதீப் ராஜிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். இதில், தோழியிடம் இன்ஸ்டாகிராமில் தவறாக நடந்து கொண்டதாக, நெல்லை பிரம்மநாயகத்தை சேலம் வரவழைத்து தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.
தனது தோழியை இன்ஸ்டாகிராமில் போலி ஐடி வழியாக தொல்லை கொடுத்துள்ளார் பிரம்மநாயகம். இந்த தொல்லை காரணமாக ராமகிருஷ்ணன் போன் செய்து கண்டித்துள்ளார். இதற்கிடையே, ராமகிருஷ்ணன் ஒரு போலி அக்கவுண்டை பேஸ்புக்கில் உருவாக்கி, பிரம்மநாயகத்தை சேலத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவரை தாக்கியது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications