மீண்டும் ஒரே மேடையில்.. அருகருகே அமர்ந்தும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாத ராமதாஸ் - அன்புமணி!
சேலம்: சேலத்தில் பாமக மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் அருகருகே அமர்ந்திருந்தாலும், அன்புமணி, ராமதாஸ் இருவருமே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர்.
கடந்த மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று சேலத்தில் நடந்த பாமக மக்கள் சந்திப்பில் பேசிய அன்புமணி ராமதாஸ், "வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தர முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுகின்றனர், ஆனால் அவர்களின் இடஒதுக்கீடு நோக்கம் நிறைவேறவில்லை; வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
மேட்டூர் அணை உபரிநீரை வசிஷ்ட நதியுடன் இணைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில் இனி எந்த கட்சியும் கூட்டணி தயவின்றி, தனியாக ஆட்சிக்கு வர முடியாது.
தமிழ்நாட்டில் யாரைக் கேட்டாலும் பாமக சிறந்த கட்சி என்று சொல்வார்கள். நல்ல கொள்கை, கோட்பாடு உள்ள கட்சி என்று சொல்வார்கள். ஆனால், இந்த செய்திகளை களத்தில் கொண்டு போய் சேர்ப்பது இல்லை. கட்சியின் ஒன்றிய செயலாளரே களத்திற்கு செல்வது இல்லை" எனப் பேசியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
அன்புமணி - ராமதாஸ் மோதல்
பாமகவில் இளைஞரணித் தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே அண்மையில் பொதுக்குழு மேடையிலேயே மிகப்பெரிய கருத்துமோதல் வெடித்தது.
முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமித்து மருத்துவர் ராமதாஸ் அறிவித்த நிலையில், மேடையிலேயே தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார் அன்புமணி. "கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுப்பது நியாயமா? அவருக்கு என்ன அனுபவம் இருக்கும்? கட்சியில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள். களத்தில் நல்ல திறமையான ஆட்கள் வேண்டும் என்று கூறுகிறேன்" எனக் காட்டமாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார் அன்புமணி.
டென்ஷன் ஆன ராமதாஸ்
இதனை கேட்டு டென்ஷனான ராமதாஸ், "நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. கட்சியை விட்டு போவதாக இருந்தால் வெளியே செல்லுங்கள்" என ஆவேசமாக கூறினார். அதற்கு அன்புமணி, சரி பண்ணுங்க பண்ணுங்க.. என ஆதங்கத்தை மறைத்துக்கொண்டே சிரித்தபடியே கூறினார். அதற்கு, என்ன சரி... சரியென்றால் போ அப்போ.." என்று எகிறினார் ராமதாஸ்.
தொடர்ந்து ராமதாஸ், "மீண்டும் சொல்கிறேன். முகுந்தன் பரசுராமன் மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார். கை தட்டுங்கப்பா..." என்றார். அப்போது, குடும்பத்துல இன்னொருத்தரைப் போடுங்க" என்று கூறிவிட்டு ஆவேசமாக மைக்கை கீழே போட்டார் அன்புமணி. தொடர்ந்து மைக்கை எடுத்துக் கொண்டு எழுந்த அன்புமணி தொண்டர்களைப் பார்த்து, சென்னை பனையூரில் அலுவலகம் ஒன்றை திறந்திருக்கிறேன். என்னை அங்கு வந்து சந்திக்கலாம்" என்றார்.
மீண்டும் ஒரே மேடையில்
அப்போது குறுக்கிட்ட ராமதாஸ், "முகுந்தன் பதவியை யாராலும் மாற்ற முடியாது. அதில் உனக்கு விருப்பம் இல்லை என்றால்... அவ்வளவுதான். நான் ஆரம்பித்த கட்சி இது. விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளுங்கள். யாராக இருந்தாலும்" என்று கூறினார் ராமதாஸ். அதையடுத்து அங்கிருந்து வேகமாக வெளியேறினார் அன்புமணி.
அதன்பிறகு, அடுத்த நாள், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசினார் அன்புமணி. அதன்பிறகு இருவரும் சமாதானம் ஆனார்கள். இந்நிலையில் தான் இன்று பாமக கூட்டத்தில் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தாலும், இருவரும் முகத்தைப் பார்த்துக் கொள்ளாமல் இருந்தனர்.












Click it and Unblock the Notifications