கல் மண்டபமும் வெளியே தெரியுது.. மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென சரிந்தது- காவிரி டெல்டா கதி என்ன?
சேலம்: காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி கருகி வரும் நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 31.72 அடியாக குறைந்துவிட்டது.
காவிரி டெல்டா பாசனங்களின் நீர் ஆதாரமே மேட்டூர் அணைதான். கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண்ராஜ சாகர் அணை கட்டப்பட்டது. கர்நாடகாவின் இந்த அத்துமீறல் காரணமாக காவிரி நதிநீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையில் 100 அடி நீர் இருப்பு உள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி 3,000 கன அடிநீரை கர்நாடகா திறக்கவில்லை. கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள், ஒரு சொட்டூ நீரைக் கூட தமிழ்நாட்டுக்கு திறக்க விடாமல் போராடி வருகின்றனர். ஏற்கனவே மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் போராட்டங்கள் நடத்தினர். கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் ஒரு மாதத்தை கடந்தும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் இருந்து சொற்ப நீர்தான் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் வெகுவாக குறைந்து அணையின் நீர் மட்டம் மளமளவென சரிந்துவிட்டது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வெறும் 154 கன அடியாக மட்டும் உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31.75 அடியாகத்தான் இருந்தது. இதனால் மேட்டூர் அணையில் பழங்கால கல் மண்டபமும் வெளியே தெரிகின்றன.
மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படுகிற நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது வினாடிக்கு 2,300 கன அடி நீர் மட்டுமே காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படுகிறது. இதனால் தற்போதைய குறுவை சாகுபடியும் அடுத்து வரும் சம்பா சாகுபடியும் பெரும் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன. இது காவிரி டெல்டா விவசாயிகளை பெரும் துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications