கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம்: கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும், தமிழத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாகவும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஒகேனக்கல் பகுதிக்கு நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கன அடியிலிருந்து 2,000 கன அடியாக அதிகரித்தது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் 62 கனஅடியாக இருந்தது., நேற்று 108 கன அடியாக உயர்ந்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 178 கனஅடியாக உயர்ந்து காணப்படுகிறது. காவிரி நீர்பிடிப்பில் பெய்த மழையால் கரைபுரண்டு வரும் தண்ணீர் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.40 அடியாகவும் நீர் இருப்பு 15.62 டிஎம்சியாகவும் இருக்கிறது, நீர்வரத்து வினாடிக்கு 178 கனஅடியாக அணைக்கு வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
தற்போது தென்மேற்கு பருவமழை மூலம் இயற்கை கைகெடுத்தால் மட்டுமே டெல்டா பாசனத்திற்காக காவிரியில் இருந்து ஜீன் 12ல் தண்ணீர் திறக்க முடியும் என்கிற சூழல்நிலை உள்ளது. இருப்பினும் ஜூலை மாதத்தில் சம்பா தாளடி போன்ற இரண்டு போக விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்னும் 10 நாளில் பெரிய அளவில் அதிகரித்தால் மட்டுமே மேட்டூர் அணை ஜுன் 2வது வாரத்தில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications