சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்துக்கு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சே!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுமார் 1 மாத காலம் தஞ்சமடைந்திருந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே இன்று அந்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை விட்டு தப்பி தாய்லாந்தில் தற்காலிகமாக கோத்தபாய ராஜபக்சே தஞ்சமடைய உள்ளார்.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதன்பின்னரும் மக்கள் போராட்டம் தொடர்ந்தது. இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றினர். இதனால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கடந்த மாதம் வெளியேறினார் கோத்தபாய ராஜபக்சே. பின்னர் இலங்கை விமானப் படை விமானம் மூலமாக மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார் கோத்தபாய.

ஆனால் மாலத்தீவில் கோத்தபாயவுக்கு இலங்கையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைய முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.
பின்னர் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார் கோத்தபாய. சிங்கப்பூர் அரசு முதலில் 14 நாட்கள், கோத்தபாய தங்கி இருக்க அனுமதித்தது. பின்னர் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை தங்கி இருக்கலாம் என அனுமதி நீட்டிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அனுமதியை நீட்டிக்க சிங்கப்பூர் அரசு மறுத்துவிட்டது.
சிங்கப்பூரில் உள்ள கோத்தபாயவை கைது செய்ய பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தின. இங்கிலாந்து எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் இன்று சிங்கப்பூரை விட்டு கோத்தபாய ராஜபக்சே வெளியேறிவிட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூரை விட்டு வெளியேறிய கோத்தபாய ராஜபக்சேவுக்கு தாய்லாந்து தற்காலிகமாக அடைக்கலம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன் ஒ சா கூறுகையில், கோத்தபாய ராஜபக்சே வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என கூறியிருக்கிறார். அதே நேரத்தில் அரசியல் அகதியாக கோத்தபாய ராஜபக்சே தங்களிடம் விண்ணப்பிக்கவில்லை எனவும் தாய்லாந்து விளக்கம் தந்துள்ளது.
முன்னதாக சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா ஆதரவுடன் வளைகுடா நாட்டில் தஞ்சமடைய கோத்தபாய ராஜபக்சே திட்டமிட்டிருந்தார். ஆனால் அம்முயற்சி பலன் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications