சிங்கப்பூர் லிட்டில் இந்தியா..இன்று முதல் களைகட்டும் பொங்கல் திருவிழா- தமிழகத்தை தூக்கி சாப்பிடுதே!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் இன்று முதல் 2 வாரங்களுக்கு பொங்கல் திருவிழா கொண்டாட்டங்கள் களைகட்டுகிறது.
தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழா தை பொங்கல் விழா. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பொங்கல் திருவிழாவை வெகு உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் கொண்டாடுவது வழக்கம்.

சிங்கப்பூரிலும் இந்த ஆண்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டங்கள் லிட்டில் இந்தியாவில் இன்று முதல் 2 வாரங்களுக்கு கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கடை உரிமையாளர், கலாசார கூட்டமைப்பு- லிஷா இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.
லிட்டில் இந்தியாவில் இன்று மாலை 5 மணி (சிங்கப்பூர் நேரம்) முதல் 6 மணி வரை விக்னேஷ் மாட்டுப் பண்ணையிலிருந்து கால்நடைகள் கேம்பெல் லேனுக்கு வருகை தரும். இந்த கால்நடைகள் பொலி எனப்படும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கூடாரத்தில் வைக்கப்படும். இந்த கால்நடைகளை பொதுமக்கள் வரும் 16-ந் தேதி வரை காணலாம். இதற்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (நாளை) மாலை 6.30 மணிக்கு "பொங்கல் திருநாளின் ஒளியூட்டு விழா" நடைபெறும். பிப்ரவரி 6-ந் தேதி வரை சிராங்கூன் சாலை முழுவதும் வண்ணமயமான ஒளியூட்டில் மிளிரும். இந்த விழாவை அமைச்சர் கிரேஸ் ஃபூ தொடங்கி வைக்கிறார். நாளை மற்றும் ஜனவரி 13 தேதிகளில் லிட்டில் இந்தியாவின் கேம்பெல் லேனில் 'தேக்கா ராஜா' எனும் யானை உருவச் சின்னத்தோடு பொதுமக்கள் செல்பி எடுத்துகொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 'இக்காலத்து இளையர்கள்' எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறும். பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் திருநாளின் விழுமியங்களையும், பாரம்பரியத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக ஜனவரி 8-ந் தேதியிலிருந்து ஜனவரி 12 வரை தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தைத்திருநாள் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.

சுற்றுலா பயணிகளுக்கு முதல்முறையாக லிஷா 'பிக் பஸ்' எனும் சுற்றுலா பயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 13-ந் தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை இரவு 7 மணிக்கு கலாசார, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைஞர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பர். ஜனவரி 14-ந் தேதி, சிறப்பு 'மண்வாசனை' நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும் சிறுவர்களுக்காக 13-ந் தேதி இந்திய மரபுடைமை நிலையத்தில் வண்ணம் தீட்டும் ஓவியப் போட்டி நடைபெறும். 3 முதியோர் இல்லங்களைச் சேர்ந்த முதியவர்களுக்கு இலவச பொங்கல் விநியோகிக்கப்படும். ஜனவரி 15 முதல் 17-ந் தேதி வரை 'பொலி'யில் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பொங்கல் இலவசமாக விநியோகிக்கப்படும்.
பொங்கல் திருநாளின் 2-வது நாள் கொண்டாட்டமாக விக்னேஷ் மாட்டுப் பண்ணை உரிமையாளர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து ஜனவரி 16-ந் தேதி, பிற்பகலில் மாட்டுப் பொங்கல் வழிபாடு நடத்துவர்.
ஜனவரி 20-ந் தேதி காலை, வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பொங்கல் சமைக்கும் போட்டியில் கலந்துகொள்ளலாம். இந்திய மரபுடைமை நிலையம் இந்த ஆண்டு, 'சூரிய ஒளி அறுவடை' என்னும் பொருளில் பொங்கல் திருநாளுக்காக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
புதிதாக கரகம் செய்யும் பயிலரங்கு, சமையல் வல்லுநர் அனில் ரவீந்திரன் செய்துகாட்டும் சமையல், வசந்தம் தொலைக்காட்சி பிரமுகர்களுடன் நடைபெறும் லிட்டில் இந்தியா தடம் போன்றவையும் இடம் பெறுகிறது.
https://peatix.com/ இணையத்தளத்தில் இந்திய மரபுடைமை நிலையத்தின் செயல்பாடுகள் இடம் பெற்றுள்ளன. பொங்கல் நிகழ்வுகளுக்கு www.pongal.sg இணையத்தளத்தை பார்வையிடலாம்.












Click it and Unblock the Notifications