வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கான கதவுகளை அடைத்துவிட மாட்டோம்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்
சிங்கப்பூர்: கொரோனா காலத்துக்குப் பின்னர் வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கான கதவுகளை நாங்கள் முற்றிலும் அடைத்துவிடமாட்டோம் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கூறியுள்ளார்.
கொரோனா பரவலை சிங்கப்பூர் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. கொரோனா கால நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் லீ சியான் லூங் கூறியதாவது:

தொடக்க நிலை நிலவரம்
தொடக்கத்தில் கொரோனா நோயாளிகளுக்கு எந்தவிதமான தொற்றும் இல்லாமல் இருந்தது. வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட அத்தனை சிங்கப்பூர் நாட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஒருகுறிப்பிட்ட நாடுகளில் இருந்து மட்டும் வந்தவர்கள் என்று நாம் பார்க்கவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தனிமைப்படுத்துதல் முகாம்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படும் முன்னர் சோதனைக்குள்ளாக்கப்பட்டனர். அதேபோல் முக கவசத்தின் பயன்பாட்டையும் அரசாங்கம் முன்கூட்டியே வலியுறுத்தியது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்து கொரோனா அதிவேகமாக பரவுவதைத் தடுப்பதில் அதிகாரிகள் விரைவாக செயல்பட்டனர். வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தங்கும் இடங்கள் மிக நெருக்கமானதாக இருந்ததால் கொரோனா பரவும் அபாயம் உணரப்பட்டது. ஆகையால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிங்கப்பூர் அரசு மேற்கொண்டது.

தவறுகளில் இருந்து பாடங்கள்
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நடவடிக்கைகளில் நாங்கள் தவறுகளை செய்திருக்கலாம். இந்த தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்கிறோம். இனியொரு முறை இத்தகைய தவறுகள் நிகழாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுபோன்ற அவசரமான காலங்களில் மிகச் சரியான முடிவுகளை எடுத்துவிடவும் முடியாது. எந்த ஒருமுடிவுக்காகவும் காத்திருக்கவும் முடியாது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுத்து இயங்கவேண்டியதுதான். இவ்வாறு பிரதமர் லீ சியான் லூங் பதிலளித்தார்.

கதவை அடைக்க மாட்டோம்
இதனிடையே சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய லீ சியான் லூங், வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கான கதவுகளை நாம் முற்றிலும் சாத்திவிட முடியாது. சிங்கப்பூர் நாட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்தாலும் ஆற்றல்மிக்க வெளிநாட்டினருக்கான கதவுகளை சிங்கப்பூர் திறந்தே வைத்திருக்கும்; அதன் மூலம் சிங்கப்பூர் நாட்டவருக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications