கண்மை டப்பாவை விழுங்கிய.. 1 வயது குழந்தை பரிதாபமாக பலி.. சிவகங்கையில் சோகம்
சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தபோது அருகில் வைக்கப்பட்டிருந்த கண்மை டப்பாவை விழுங்கிய 1 வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு பெற்றோர் குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடிய நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை திடீரென மூச்சுத் திணறுவதுபோல் செய்ததையடுத்து தாய் அருகில் சென்று பார்த்தபோது குழந்தையின் வாயில் மை டப்பா இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தையின் தாய் கண்மை டப்பாவை எடுக்க முயன்றுள்ள நிலையில், குழந்தை டப்பாவை விழுங்கியுள்ளது.

நடிகர் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நாணயத்தை விழுங்கிவிடும் பதைபதைக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு அந்த நாணயத்தை எடுத்துவிடுவார்கள். அந்தக் காட்சிதான் அப்படத்தின் முக்கியமான காட்சியாகவும் அமைந்திருக்கும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக குழந்தைகள் எதைப் பார்த்தாலும் அதனை எடுத்து வாயில் வைத்து சுவைப்பதும், அதனை விழுங்க முயற்சிப்பதும் இயல்புதான். இதனால்தான் சிறிய பொருள்களை குழந்தையின் கண் முன்னால் வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தைகளிடம் சிறிய விளையாட்டுப் பொருள்கள், மினியேச்சர் பொம்மைகளை கையில் கொடுக்காமல் இருப்பதே நல்லது. இந்த விஷயத்தில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில், சிவகங்கையில் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கா சென்ற தம்பதியின் ஒரு வயது குழந்தை கண்மை டப்பாவை விழுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சிவகங்கை தாளவாசல் பகுதியில் உள்ள அவர்களது வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். இதையடுத்து, சூரியபிரகாஷின் ஒரு வயது மகன் தரன்தேவாவுக்கு மேக்கப் போட்டு, பவுடர் அடித்து, பொட்டு வைத்து அழகு பார்த்துள்ளார் அவரது தாய்.
இதையடுத்து, அவர் சமையலறைக்குச் சென்ற நிலையில் தரன்தேவ் அருகில் இருந்த மை டப்பாவை எடுத்து வாயில் வைத்துள்ளார். இந்நிலையில், குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த தாய் அருகில் வந்து பார்த்தபோது குழந்தையின் வாயில் மை டப்பா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கண்மை டப்பாவை எடுப்பதற்கு தாய் முயற்சி செய்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக குழந்தை மை டப்பாவை விழுங்கியுள்ளது.
இந்நிலையில், குழந்தையின் வாயில் இருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது பெற்றோரும், உறவினரும் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நிலையில், குழந்தைக்குப் பொட்டு வைத்து, பவுடர் போட்டு தாய் அழகுபார்த்த சிறிய நேரத்தில், குழந்தை மை டப்பாவை விழுங்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் எடுக்கும் தூரத்தில் எந்த ஒரு சிறிய பொருள்களையும் வைக்கப்படாமல் இருப்பதை பெற்றோரும், வீட்டில் இருப்பவர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications