நாங்குநேரியை தொடர்ந்து! இடைக்காட்டூர் கிராமத்தில் கொடூர தாக்குதல்! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சிவகங்கை: நாங்குநேரியை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் அரிவாளுடன் வந்த 9 பேர், கண்ணால் பார்த்தவர்களையெல்லாம் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மற்றும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே?
திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் #சமூக_அநீதி_திமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? "முடிந்துவிட்டது" என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆமாம் மு.க.ஸ்டாலினே! உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது! பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது! சமூகநீதி முடிந்துவிட்டது! மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!
இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் "சிறப்பாக செய்ய" காத்திருக்கிறார்கள்!
இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அது போல் அதிமுக வெளியிட்ட பதிவில், வேங்கை வயல் மலம் கலப்பு, இடைக்காட்டூர் தாக்குதல், நாங்குநேரி கொடூரம் என திமுக அரசின் முகத்திரை நாளுக்கு நாள் கிழிந்து கொண்டு வருகிறது!
இந்தியாவிலேயே பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளில் தமிழகம் முன்னிலை வகிப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நேர்ந்த அவமானம்.
சட்டம் ஒழுங்கைச் சரியாகக் கையாளத் தெரியாமல், பட்டியலின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கும் இந்த 'பொம்மை முதல்வர்' இதற்குப் பொறுப்பேற்று வெட்கித் தலைகுனிய வேண்டும்!
விளம்பர அரசியலில் காட்டும் வேகத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பில் காட்டாதது ஏன்? கேடுகெட்ட திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக வாழும் சூழல் இல்லை என்பதே இன்றைய கசப்பான உண்மை! என அதிமுக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications