அம்மா எனக்கு நல்ல துறையை தந்திருக்கலாம்... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பாஸ்கரன்
சிவகங்கை: ஜெயலலிதா நினைத்திருந்தால் தனக்கு நல்ல துறையை கொடுத்திருக்கலாம் என்றும், ஆனால் கதர்துறையை தான் அவர் கொடுத்தார் எனப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் பாஸ்கரன்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர் இதனை கூறினார். அமைச்சரின் இந்த கருத்து அதிமுக உட்கட்சி வட்டாரத்திலேயே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ.சீட் கொடுத்து வெற்றிபெற வைத்து அமைச்சரும் ஆக்கிய ஜெயலலிதாவை அமைச்சர் குறை கூறியது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றியக் கவுன்சிலர் சீட்டுக்காக பலரும் முட்டி மோதி வரும் இந்தக் காலத்தில் அம்மா அமைச்சர் ஆக்கியது இவருக்கு போதாதா என அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அமைச்சர் பாஸ்கரனை பொறுத்தவரை கடந்த மூன்றாண்டுகளாகவே இருக்கும் இடம் தெரியாமல் தான் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு யார் சொல்லிக் கொடுக்கிறார்களோ தெரியவில்லை, கடந்த 6 மாத காலமாகவே சர்ச்சைக்குரிய வகையில் பேசி வம்பில் மாட்டிக்கொள்கிறார். இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, தேமுதிகவை விமர்சித்து கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தினார். அவருக்கு பதிலடி தந்த பிரேமலதா விஜயகாந்த், பாஸ்கரன் என்று ஒரு அமைச்சர் தமிழகத்தில் இருக்கிறாரா என கேட்டு மூக்குடைத்தார்.
அதைத்தொடர்ந்து பாஜகவை எப்படி கழற்றிவிடுவது என்று யோசிக்கிறோம் எனப் பேசி பஞ்சாயத்தை ஏற்படுத்தினார். அமைச்சரின் இந்தப் பேச்சு பாஜக தேசியத்தலைமை வரை சென்றது. இதனால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவருமே அமைச்சர் பாஸ்கரன் மீது கடும் அதிருப்தி கொண்டனர். மேலும், சமீபத்தில் நடைபெற்ற அமைச்சர்களுடனான தனி தனி சந்திப்பில் கூட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்து தான் பாஸ்கரனை அனுப்பியுள்ளார். ஆனால் அப்படியிருந்தும் ஜெயலலிதா கொடுத்த பதவியை குறைசொல்லி அவர் பேசியிருப்பது அதிமுக சீனியர் நிர்வாகிகளை கொதிப்படைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications