மடப்புரம் கோயிலில் அஜித் குமாரை ஆட்டோவில் ஏற்றியபோது எப்படி இருந்தார்? ஓட்டுநர் பரபரப்பு தகவல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரை காவலர்கள் தாக்கியபோது, அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர், நடந்தது என்ன என்பது குறித்து பரபரப்புத் தகவல்களை அளித்துள்ளார்.
இதுகுறித்து, அஜித்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் அன்றைய தினம் கோயில் வாசலில் சவாரிக்கு நின்றிருந்தேன். என்னைப் சத்தீஸ்வரன் என்பவர் வந்து அழைத்தார்."

"நானும் 'எதுக்குப்பா?' என்று கேட்காமல் அவர் அழைத்தபடி கோயிலில் உள்ள அலுவலகம் வரை சென்றேன். அங்கு 'அஜித் உடல்நிலை மோசமாகி மயக்கத்தில் இருக்கிறார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்' என்றார்."
"நானும் 'சரி, தூக்குங்க, ஆஸ்பத்திரிக்குப் போகலாம்' என்றேன். உடனே அங்கிருந்த போலீஸாரும் கோயில் அலுவலகத்தில் வேலை பார்ப்போரும் தூக்கி ஆட்டோவில் ஏற்றினர். நான் 'எங்கே போகணும்?' எனக் கேட்டேன். 'அரசு மருத்துவமனைக்குப் போ' என்றார்கள். நானும் போனேன். அங்கு ஆட்டோவை நிறுத்தியதும் அவர்களே அஜித்தை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றார்கள்."
"திருப்புவனம் காவல் நிலையத்திலிருந்து ஒரு காவலர் வந்து எனது பெயர், போன் நம்பரை எல்லாம் கேட்டுவிட்டு, பிறகு 'இங்கேயே நில்லுப்பா' என்றார். நானும் நின்றுவிட்டேன். பின்னர் அந்தக் காவலர் உள்ளே இருந்து வந்தார். அவரிடம், 'சார், நான் நிற்கவா இல்லை கிளம்பவா?' எனக் கேட்டேன். அதற்கு அவர் 'கிளம்பு' என்றார். நான் கிளம்பும்போது, 'அஜித் இறந்துவிட்டான்' என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். உடனே நானும் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்."
"வண்டியில் எந்த இரத்தமும் இல்லை, அவர் ஆட்டோவில் சிறுநீரும் கழிக்கவில்லை. அவர் உடம்பில் காயம் இருந்ததா எனத் தெரியவில்லை. நான் பார்க்கும்போது, அஜித் கண்களை மூடிக் கொண்டுதான் இருந்தார்," இவ்வாறு அய்யனார் தெரிவித்தார்.
சத்தீஸ்வரன் வெளியிட்ட தகவல்கள்
மடப்புரம் காவலாளி அஜித்குமார், நிகிதாவின் காரில் இருந்த 10 பவுன் நகைகளைத் திருடியதாகக் கூறிய புகாரின் பேரில், தனிப்படை போலீஸார் கோயிலுக்குள் சென்று அங்கிருந்த மாட்டுக் கொட்டகையில் வைத்து அஜித்குமாரைத் தாக்கியதாக அவரது நண்பரும் கோயில் ஊழியருமான சத்தீஸ்வரன் தெரிவித்திருந்தார்.
அந்த மாட்டுக் கொட்டகையில் வைத்துதான் அஜித்குமாரை போலீஸார் தாக்கியதாகவும், அது தொடர்பான வீடியோவையும் சத்தீஸ்வரன் வெளியிட்டார். அந்த வீடியோவை நீதிமன்றத்திலும் அவர் சமர்ப்பித்துள்ளார்.
நண்பர்கள் விவரித்த கொடூரத் தாக்குதல்
அஜித்குமாரை போலீஸார் எப்படியெல்லாம் தாக்கினார்கள் என்பதை அவருடைய நண்பர்கள் விவரித்துள்ளனர். அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து அடித்ததாகவும், அவர் தண்ணீர் கேட்டபோது முதலில் கொடுக்க மறுத்துவிட்டு, பின்னர் அந்தத் தண்ணீரில் மிளகாய்ப் பொடியைக் கலந்து கொடுத்ததாகவும், அந்த மிளகாய்ப் பொடியை அஜித்தின் முகத்தில் பூசிக் கொடூரத்தை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை ஆட்டோவில் ஏற்றியபோதே, அவருக்கு இதயத் துடிப்பும், நாடித் துடிப்பும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications