Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sivagangai Ajithkumar: என் மகனை தாக்க சொன்னது யார்? மடப்புரம் அஜித்குமாரின் தாய் மாலதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காவலாளி அஜித்குமாரை தாக்க சொன்னது யார்? என தாய் மாலதி கேள்வி எழுப்பியுள்ளார். அஜித்குமார் குற்றவாளி இல்லை என நீதிமன்றமே தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறிவிட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். கடந்த ஜூன் 27-ல், கோயில் காவலாளி அஜித்குமார் நிகிதா அளித்த நகை திருட்டுப் புகாரின் பேரில் தனிப்படை காவலர்களால் விசாரிக்கப்பட்டார்.

Sivagangai Ajithkumar

கடும் தாக்குதலுக்குள்ளான அவர், ஜூன் 28-ல் உயிரிழந்தார். இக்கொலை வழக்கில், கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் உட்பட ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்கு பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட காவலர்கள்

கைது செய்யப்பட்ட காவலர்கள் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். சிபிஐ இரு பதில் மனுக்களைச் சமர்ப்பித்தது. அஜித்குமார் மரணம் காவல் மரணம் என்றும், டிஎஸ்பி, ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என பத்து பேருக்கும் இதில் தொடர்பிருப்பதாகவும் சிபிஐ வாதிட்டது.

நீதிபதி கேள்வி

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "நகை திருட்டுப் புகார் என்ன ஆனது?" எனக் கேட்டார். அதற்கு சிபிஐ வழக்கறிஞர், "அது உண்மை இல்லை என்பதால் புகார் முடிக்கப்பட்டுவிட்டது. அது தொடர்பான அறிக்கை தயாராகி வருகிறது, விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்றார்.

ஒன்றுமே இல்லாத வழக்கு

நீதிபதி மேலும், "ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரைக் கொலை செய்துள்ளனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? அவர்தானே அனைத்திற்கும் காரணம்? பலர் சேர்ந்து ஒருவரைத் தாக்க என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா?" என அடுத்தடுத்து வினவினார்.

முன்விரோதம்

அதற்கு சிபிஐ, "முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு உத்தரவிட்டதால் இவ்வாறு விசாரித்தனர்" என்றது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "பிரபுவைத் தவிர மற்ற காவலர்கள் அடித்ததாகவே வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்கள்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனம் பதறுகிறது. ஏதுமில்லாத விஷயத்துக்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்குப் பாடம் புகட்டுவோம்" எனக் கடுமையாகக் கூறி, விசாரணையை பிப்.17-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நிகிதாவை கைது செய்யணும்

இதைத் தொடர்ந்து நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் இன்றைய தினம் அஜித்குமாரின் தாய் மாலதி செய்தியாளர்களை சந்தித்தார்.

மகன் திருடன் இல்லை

அப்போது அவர் கூறுகையில், "என் மகன் திருடன் இல்லை என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவு மகிழ்ச்சியளித்தாலும் என் மகன் இறந்ததை தாங்க முடியாத வருத்தம் இருக்கிறது. கோயிலில் 11 மணிக்கு சம்பவம் நடந்துள்ளது. எனக்கு தெரியப்படுத்தவே இல்லை.

வியர்த்தது ஒரு காரணமா

2 மணிக்குத்தான் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். என் மகனுக்கு வியர்த்தது எல்லாம் ஒரு காரணம் என கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஏன் என்னிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. மாலை 4.30மணிக்குத்தான் எனக்கு தகவல் கொடுத்தனர்.

யார் சொல்லி புகார் கொடுத்தார்

யார் யாரோ அடித்ததாக கூறுகிறார்கள், எதற்காக என் மகனை அடித்தார்கள்? நிகிதா பொய் புகார் கொடுத்திருக்கிறார், யார் சொல்லி புகார் கொடுத்தார்? பெரிய இடத்தில் இருந்து வந்த உத்தரவின்படி செய்ததாக அந்த போலீஸ்காரர்கள் சொல்கிறார்கள். அந்த பெரிய இடம் என்பது யார்? எனக்கு தெரியவேண்டும்.

அப்பாவி மீது மிளகாய் பொடி தூவி கொடூரம்

என் மகனை அடிப்பதற்கு முன் என்னிடம் முதலில் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். வியர்த்தது எல்லாம் ஒரு காரணமா? நிகிதாவை கைது செய்ய வேண்டும். ஒன்றுமே அறியாத ஒரு அப்பாவியை மிள காய் பொடித் தூவி தண்ணீர் கொடுக்காமல் இவ்வளவு கொடூரமாக அடித்திருக்கிறார்கள்.

தீவிரவாதியா

இதற்கெல்லாம் சட்டத்தில் இடம் இருக்கிறதா? இப்படி கொடுமைப்படுத்த என் மகன் என்ன தீவிரவாதியா? சந்தேகம் எழுந்தால் அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டியது தவறில்லை. ஆனால் ஏன் இவ்வளவு கொடுமைப்படுத்த வேண்டும்? மரத்தில் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள்.

சிறுநீர் வலுகட்டாயம்

சிறுநீரை கூட வலுக்கட்டாயமாக வர வைத்திருக்கிறார்கள். என் மகன் கூனிக் குறுகி இறந்து போயிருப்பான். கஞ்சிக்கு வழியில்லாவிட்டாலும் என் இரு மகன்களையும் நான் வைராக்கியத்துடன் நேர்மையானவர்களாக வளர்த்துள்ளேன். சிபிஐ விசாரணை மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு தாய் என்ற உணர்வுடன் நீதிபதி நேற்று இந்த வழக்கில் சில கருத்துக்களை முன் வைத்துள்ளதை உணர்ந்துள்ளேன் என மாலதி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+