சிராவயல் மஞ்சுவிரட்டில் 2 பேர் உயிரிழப்பு! தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டுப் போட்டியில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை போலவே உலகப் புகழ் பெற்ற சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகளை அவிழ்த்துவிட்டபோது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் மாடு முட்டி இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் போட்டிகள் நடத்தப்பட்டும் இந்த துயர நிகழ்வு நடந்தேறிவிட்டது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு;
''சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்ற இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சி, மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த திரு.முத்துமணி (வயது 32) த/பெ.முத்துராமன் மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கே.வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பாஸ்கரன் (வயது 12) த/பெ.லட்சுமணன் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.'' இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications