காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டி படுகொலை.. பெண்ணின் சகோதரர் உட்பட 3 பேர் கைது! சிவகாசியில் பகீர்
சிவகாசி: காதல் திருமணம் செய்த இளைஞரைப் பெண்ணின் சகோதரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு இந்த படுகொலை சம்பவம் நடந்த நிலையில், உடனடியாக விசாரணையைத் தொடங்கிய போலீசார் இது குறித்து பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
நமது நாட்டில் மட்டும் பிள்ளைகள் காதல் திருமணம் செய்வதைப் பெற்றோர் பலரும் ஏற்பதே இல்லை. பிள்ளைகளின் காதலை ஏற்க மறுக்கும் பெற்றோர் சில சமயங்களில் கொடூர கொலைகளையும் செய்கிறார்கள்.

இதுபோன்ற ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் இவை தொடர்ந்து நடந்தே வருகிறது. அதுபோன்ற ஒரு பகீர் சம்பவம் தான் இப்போது சிவகாசியில் மீண்டும் நடந்துள்ளது.
காதல் திருமணம்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்பாண்டி.. 26 வயதான இவர், சிவகாசியில் மெக்கானிக்காக சில காலத்திற்கு முன்பு வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்த சிவகாசி வம்பிழுத்தான் முக்கு பகுதியைச் சேர்ந்த நந்தினி(22) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு காதலாக மாறி இருக்கிறது. இருப்பினும், இவர்களின் காதலைப் பெண் வீட்டார் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் அய்யம்பட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து தனியாகத் தங்கியுள்ளனர்.
வெட்டி படுகொலை: நந்தினி சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இதற்கிடையே நேற்றிரவு பணியை முடித்த நந்தினியை அழைத்துச் செல்ல அங்கே கார்த்திக் பாண்டி வந்துள்ளார். அப்போது திடீரென அங்கு பைக்கில் வந்த மூன்று பேர் கார்த்திக்கை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளனர். இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்தார். அந்த 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கைப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார் கார்த்திக் பாண்டி உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மூன்று பேர் கைது: இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதில் முதற்கட்ட விசாரணையில் நந்தினியின் சகோதரர் பாலமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த படுகொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அவர்களைத் தேடும் பணிகளில் போலீசார் இறங்கினர்.
இதற்கிடையே இன்று காலை நந்தினி சகோதரர் பாலமுருகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இப்போது போலீசார் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காதல் திருமணம் செய்த இளைஞரைப் பெண்ணின் சகோதரர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications