சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி.. சுமார் ரூ.5,000 கோடிக்கு சூதாட்டம்.. வெளியான பகீர் தகவல்
டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் துபாயில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபியை வைத்து நடந்த மாபெரும் சூதாட்டம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இறுதிப் போட்டிக்கு மட்டும் சுமார் 5000 கோடி அளவில் பெட்டிங் நடந்ததாகக் கூறப்படுகிறது.
விளையாட்டை முன்வைத்து பெட்டிங் செய்வது சட்டவிரோதம் எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதையும் தாண்டி சட்டவிரோதமான முறையில் சூதாட்டம் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருகிறது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் சூழலில் இதை வைத்தும் பெரியளவில் சூதாட்டம் நடந்துள்ளது.

சூதாட்டம்
இது குறித்து விவரம் அறிந்த சிலர் கூறுகையில், "நிழல் உலகைச் சேர்ந்தவர்கள் இந்த சூதாட்டத்தை நடத்துகிறார்கள். இன்றைய போட்டியில் இந்தியா வெல்லும் என்றே பலரும் பெட் கட்டி இருக்கிறார்கள். இந்தப் போட்டி என்று இல்லை.. எப்போதெல்லாம் பெரிய போட்டி நடைபெறுகிறதோ.. அப்போதெல்லாம் உலகம் முழுக்க இருந்து வரும் சூதாட்டக்காரர்கள் துபாயில் கூடிச் சூதாடுவார்கள். தாவூத் இப்ராஹிமின் 'டி கம்பெனி' தான் துபாயில் பெரியளவில் கிரிக்கெட் சூதாட்டங்களை நடத்தி வருகிறது" என்றனர்.
இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியின் போதே டெல்லி போலீசார் ஐந்து பெரிய சூதாட்டக்காரர்களை கைது செய்தனர். அவர்கள் அரையிறுதி போட்டியை வைத்து பந்தயம் கட்டியதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்திய விசாரணையிலேயே துபாயில் உள்ள சூதாட்ட கேங் குறித்து போலீசாருக்கு தெரிய வந்துள்ளது
அரையிறுதிப் போட்டி
இது தொடர்பான ஒரு வழக்கில், இந்தியா ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பர்வீன் கோச்சார் மற்றும் சஞ்சய் குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் லேப்டாப்பில் பந்தயம் கட்டிக் கொண்டு இருக்கும் போதே போலீசார் இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களையும் மீட்டுள்ளனர்.
இதில் பர்வீன் கோச்சார் என்பவர் தான் முதலில் ஒரு மாஸ்டர் ஐடியை வாங்கியுள்ளார். அதை வைத்துப் பல ஐடிகளை உருவாக்கி விற்றுள்ளனர். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இந்த கேங் 3 சதவீத கமிஷன் வசூலித்தது. அதேபோல செல்போன் மூலம் ஆப்லைன் பெட்டிங்களையும் பெற்றுள்ளனர். அந்தத் தகவல்களை நோட் பேட் ஒன்றில் எழுதி வைத்துள்ளனர்.
என்ன நடந்தது
இந்த சூதாட்டத்திற்காகவே பர்வீன் கோச்சார் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதம் ரூ.35,000க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். இருப்பினும், பலரும் சூதாடுவதால் ஒவ்வொரு போட்டியின் போதும் அவர் குறைந்தது ரூ.40,000 லாபம் பார்ப்பாராம். அவரிடம் நடந்த விசாரணையில் தான், இந்த முழு நெட்வொர்க்கும் துபாயிலிருந்து கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறியிருக்கிறார்.
ரூ.5,000 கோடி
இதுவரை இந்த விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் ரொக்கத்தை போலீசார் மீட்டனர். இதில் சர்வதேச அளவில் பல முக்கிய நபர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் சூழலில் இதில் சுமார் ரூ.5,000 கோடி வரையில் சூதாட்டம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications