பிரசாந்த் வீர்க்கு 1 ஓவர் கொடுக்கலை.. 12வது ஓவரிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட சிஎஸ்கே.. காரணம் ருதுராஜ்
சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான சிஎஸ்கே அணியின் படுதோல்விக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கேப்டன்சியின் போது ருதுராஜ் கெய்க்வாட் கொஞ்சம் கூட நம்பிக்கையுடன் செயல்படவில்லை. 12வது ஓவரிலேயே சிஎஸ்கே அணி வீரர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 43 பந்துகளில் 73 ரன்களும், சிவம் துபே 27 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர்.

இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. இதன் மூலமாக சென்னை அணி 2 போட்டிகளில் விளையாடி 2லும் தோல்வியை சந்தித்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
ஏனென்றால் பேட்டிங்கின் போது ஆயுஷ் மாத்ரே ஒரு பக்கம் விளாசி தள்ளிய போது, ருதுராஜ் கெய்க்வாட் அடக்கி வாசிக்கிறேன் என்ற பெயரில் 1, 2 ரன்களாகவே சேர்த்தார். அதுமட்டுமல்லாமல் 2 ரன்களாக ஓடி சிறுவரான ஆயுஷ் மாத்ரேவை களைப்படைய வைத்துவிட்டார். இறுதியாக 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது பேட்டிங்கில் சிஎஸ்கே அணிக்கு 20 ரன்களை குறைவாக எட்ட காரணமாகியது.
அதேபோல் பவுலிங்கின் போது சிஎஸ்கே பவுலர்களிடம் எந்தவித உற்சாகமும் இல்லை. பிரியன்ஷ் ஆர்யா போன்ற வீரர்களுக்கு 3 டாட் பால்களை வீசினாலே அவர்கள் பொறுமையை இழந்துவிடுவார்கள். அவருக்கு எதிராக எந்தவித திட்டமும் இல்லாமல் சிஎஸ்கே பவுலர்கள் ஷார்ட் பால்களாக வீசி சிக்சர்கள், பவுண்டரியை விட்டுக் கொடுத்தது.
கலீல் அஹ்மத் போன்ற பவுலர்கள் எளிதாக டாட் பால்களை வீசினாலும், கூடவே ஒய்டுகளை வீசி momentum-மை விட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். அதேபோல் 12வது ஓவரிலேயே சிஎஸ்கே அணி பவுலர்களின் பாடி லேங்குவேஜ் மோசமாகியது. கடைசி நேரத்தில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய போதும் கூட கூடுதலாக அட்டாக் செய்து போராடி இருக்கலாம்.
அதேபோல் ஜேமி ஓவர்டனை வெளியில் உட்கார வைத்துவிட்டு பிரசாந்த் வீரை கொண்டு வந்ததே அவரின் பவுலிங்கிற்காக தான். ஆனால் கடைசி வரை ஸ்பின்னரான பிரசாந்த் வீர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. ஜடேஜாவின் பேக் அப் வீரராக பார்க்கப்பட்ட அவருக்கு, ஏன் சிஎஸ்கே அணி ஒரு ஓவரை கூட கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications