சாம்பியன்ஸ் டிராபி பைனல் பிட்ச்.. ஆஹா இந்திய அணிக்கு கிடைத்த சாதகம்.. ரோஹித் சர்மாவுக்கு ஜாலிதான்!
துபாய்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு எந்த பிட்ச் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடிய பிட்ச் பயன்படுத்தப்பட உள்ளதால், இந்திய அணி மீண்டும் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் மைதானத்தில் நாளை நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் மீண்டும் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.

இதனால் 2 தோல்விகளுக்கு இந்திய அணி பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லீக் சுற்றை பொறுத்தவரை நியூசிலாந்து அணி இந்திய அணியிடம் மட்டுமே தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே துபாய் மண்ணில் ஒரு போட்டியில் விளையாடி இருப்பதால், நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் கூடுதல் எச்சரிக்கையுடன் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் எந்த பிட்ச் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிய அதே பிட்ச், மீண்டும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏனென்றால் ஸ்பின்னர்களுக்கு இந்த பிட்ச் உதவியாக இருக்கும்.
அதாவது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி 26 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்து வீசியது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அதேபோல் பாகிஸ்தான் அணியின் அப்ரார் அஹ்மத் 10 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த பிட்சில் 2வது பவுலிங் செய்யும் அணிக்கு கூடுதல் உதவி கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அன்றைய நாளில் அப்ரார் அஹ்மத் தனியாளாக விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் மூவரையும் அச்சுறுத்தினர். ஆனால் நியூசிலாந்து அணியிடம் சான்ட்னர், பிரேஸ்வெல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா என்று ஒரு படையையே வைத்துள்ளனர்.
இதனால் முதல் பேட்டிங் ஆடுவதே சிறப்பானது என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் 4வது ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் வரும் போது இந்திய அணியால் எளிதாக நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications