ஜெய்ஸ்வாலை ஒதுக்கிய சஞ்சு சாம்சன்.. ரியான் பராக்-க்காக நடந்த லாபி.. காரணமே அந்த ஆதரவுதான்!
மும்பை: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் கொல்கத்தா மண்ணில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் விளையாடுகின்றன. இதன்பின் மார்ச் 23ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. கடந்த 3 சீசன்களில் ராஜஸ்தான் அணி 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தி இருக்கிறது.
இந்த சீசனில் சாஹல், போல்ட், அஸ்வின், ஜோஸ் பட்லர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும், சிறந்த அணியை கட்டமைத்துள்ளது. ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா, ஹசரங்கா, நிதீஷ் ராணா உள்ளிட்டோர் வாங்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் ராஜஸ்தான் அணி இம்முறை பல்வேறு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ராஜஸ்தான் அணியின் வீரர்களை ராகுல் டிராவிட் மற்றும் சங்கக்காரா இருவரும் இணைந்து தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விரல்களில் காயம் ஏற்பட்டிருந்தது. அதற்கான சிகிச்சையில் இருந்து வரும் அவர், இன்னும் முழு ஃபிட்னஸை எட்டவில்லை.
ஐபிஎல் தொடர் நெருங்கிவிட்ட நிலையில், அவருக்கு இதுவரை என்சிஏவில் இருந்து முழு ஃபிட்னஸ் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. இதனால் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங்கோ, ஃபீல்டிங்கோ செய்ய கூடாது. மீறினால் அவர் மீது பிசிசிஐ நடவடிக்கை பாயும். இதனால் முதல் 3 போட்டிகளில் சஞ்சு சாம்சன் இம்பேக்ட் வீரராக மட்டுமே ஆடவுள்ளார்.
இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சஞ்சு சாம்சன் இடத்தில் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் அறிவிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் முழு ஃபிட்னஸை எட்டும் வரையில் ராஜஸ்தான் அணியை ரியான் பராக் வழிநடத்தவிருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் ஆடி வரும் இளம் நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அண்மையில் ஆஸ்திரேலியா மண்ணில் சீனியர் வீரர்களே திணறிய போதும், ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசி சாதனை படைத்தார்.
இதனால் சுப்மன் கில்லை விடவும் ஜெய்ஸ்வால் அடுத்த கேப்டனாக உருவாக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதன் காரணமாக ராஜஸ்தான் அணியின் துணைக் கேப்டன் பதவி யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அளிக்கப்படும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ஜெய்ஸ்வாலை விடவும் அனுபவம் குறைந்த வீரரான ரியான் பராக்கிற்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தருணங்களிலும் ஜெய்ஸ்வால் கேப்டனுக்கான பண்புடன் காணப்பட்டுள்ளார். இருந்தாலும் ரியான் பராக்கிற்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டதற்கு அசாம் அணியை வழிநடத்திய அனுபவமே காரணம் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ரியான் பராக்கை கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலமாக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மக்களின் ஆதரவு அந்த அணிக்கு கிடைக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications