ஹேசல்வுட் இல்லாத 2 போட்டி.. வெட்ட வெளிச்சமான ஆர்சிபி பவுலிங்.. இது நடக்கவில்லை என்றால் அவ்வளவுதான்!
லக்னோ: ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஹேசல்வுட் இல்லாததன் காரணமாகவே, அந்த அணியின் பவுலிங் பிரச்சனைகள் எளிதாக எதிரணிகளால் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 19.5 ஓவர்களில் 189 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டாகியது.

ஆர்சிபி வரலாறு
இதனால் புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஒரு போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறவில்லை என்றால், மீண்டும் ஆர்சிபி அணி எலிமினேட்டர் சுற்றில் விளையாட வேண்டிய சூழல் ஏற்படும். இதுவரை 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் ஆர்சிபி அணி, 2 முறை மட்டுமே இறுதிப் போட்டியில் ஆடியுள்ளது.
ஹேசல்வுட் தாக்கம்
இதனால் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி விளையாடினால், எளிதாக வெளியேற்றப்படும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணியின் தோல்விக்கு நட்சத்திர வீரர் ஹேசல்வுட் இல்லாததே முக்கிய காரணம். போர் பதற்றத்திற்கு முன்பாகவே ஹேசல்வுட் தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் சிஎஸ்கே அணியுடனான போட்டியில் அவர் களமிறங்கவில்லை.
ஆர்சிபி பவுலிங்
அந்த போட்டியிலேயே சிஎஸ்கே அணியின் மோசமான பேட்டிங் வரிசையால் எளிதாக 211 ரன்கள் குவிக்கப்பட்டது. தற்போது நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி 231 ரன்களை குவித்திருக்கிறது. இதுவே ஹேசல்வுட் இருந்திருந்தால், பவர் பிளேவில் 2 ஓவர்களை வீசி ரன்களை கட்டுப்படுத்தி இருப்பார். அதேபோல் டெத் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டையும் வீழ்த்தி இருப்பார்.
சிக்கல்கள்
இந்த சீசனில் மட்டும் 10 இன்னிங்ஸில் விளையாடிய ஹேசல்வுட் 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதனால் ஆர்சிபி அணியின் பவுலிங்கே ஹேசல்வுட்டை சுற்றி கட்டமைக்கப்பட்டிருந்தது. தற்போது ஹேசல்வுட்டுக்கான மாற்று வீரரை அடையாளம் காண முடியாமல் ஆர்சிபி அணி தவித்து வருகிறது. புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்ட், யாஷ் தயாள் உள்ளிட்டோரால் அவரின் இடத்தை நிரப்ப முடியவில்லை.
18வது முறையாக
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக ஹேசல்வுட் மீண்டும் ஆர்சிபி அணியுடன் இணையப் போவதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒருவேளை ஹேசல்வுட் மீண்டும் ஆர்சிபி அணியுடன் இணையவில்லை என்றால், ஆர்சிபி அணி 18வது சீசனிலும் கோப்பையை வெல்ல முடியாமல் இதயத்தை வென்று வெளியேறும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications