28 ஆயிரம் ரன்கள்.. சச்சினுக்கு பின் நான் மட்டும்தான் இருக்கணும்.. சாதித்துக் காட்டிய விராட் கோலி!
வதோதரா: சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 44 பந்துகளில் அரைசதத்தை எட்டிய விராட் கோலி, மகத்தான இந்த சாதனையையும் படைத்திருக்கிறார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களை குவித்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் ரோகித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி களம் புகுந்தார். முதல் சில பந்துகள் நிதானம் காட்டிய விராட் கோலி, பின்னர் அதிரடிக்கு திரும்பினார். அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்த விராட் கோலி 44 பந்துகளில் அரைசதம் கடந்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 77வது அரைசதம் இதுவாகும். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்தப் போட்டியில் 25 ரன்களை எடுத்த போது, நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்களை எட்டிய 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து 43 ரன்களை கடந்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
இதன் மூலமாக 28,016 ரன்களுடன் 2வது இடத்தில் இருந்த சங்கக்காராவின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 123 போட்டிகளில் விளையாடி 9,230 ரன்களை விராட் கோலி குவித்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் 125 போட்டிகளில் விளையாடி 4,188 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தை விராட் கோலி பிடித்து அசத்தி இருக்கிறார்.
இது விராட் கோலி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டில் அதிகளவிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கவிருந்தால், விராட் கோலியால் எளிதாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்களை கடக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications