ஊழலில் சிக்கியோரை காப்பாற்ற நெருக்கடி கொடுத்தது மன்மோகன் அரசு: 'சிஏஜி' வினோத் ராய் 'குண்டு வீச்சு'!
டெல்லி: மத்தியில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடுகள் தொடர்பான சிஏஜி அறிக்கைகளில் இருந்து சிலரின் பெயர்களை நீக்குமாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தனக்கு நெருக்கடி கொடுத்ததாக முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் கூறினார்.
மத்திய கணக்குத் தணிக்கையாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற வினோத் ராய், "வெறும் கணக்காளர் மட்டுமல்ல' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். அந்தப் புத்தகம், வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படவுள்ளது.

இவர்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில், அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உத்தேச இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தனது பதவிக் காலத்தில் அளித்த சிஏஜி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தற்போது முந்தைய காங்கிரஸ் அரசை விமர்சித்து தான் எழுதும் புத்தகம் குறித்து வினோத் ராய் கூறியதாவது:
மன்மோகன் சிங் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக, தயக்கமின்றி முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்து, எப்படி மிகப்பெரிய இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தார் என்பதை நான் எழுதும் புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
எந்த ஒரு விவகாரத்திலும், இறுதி முடிவை பிரதமரே எடுக்க வேண்டும். இதைச் சில நேரங்களில் மன்மோகன் சிங் செய்தார். சில நேரங்களில் தவறி விட்டார். ஆட்சியைத் தக்கவைப்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யக் கூடாது.
சிஏஜி அறிக்கையில் இருந்து சில பெயர்களை நீக்குமாறு, இதற்கு முன்பு என்னுடன் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகள் மூலமாகவும் அவர்கள் என்னைச் சந்தித்தனர்.
எனக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, சில அரசியல் தலைவர்களை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் பணித்திருந்தன. கூட்டணிக் கட்சிகளின் கட்டாயத்துக்காக, அரசை பலிகடா ஆக்கவும் கூடாது.
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் கூட்டங்களின்போது, அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், கடினமான கேள்விகளை எழுப்பி நெருக்கடி கொடுத்தனர். இவற்றையெல்லாம் எனது புத்தகத்தில் தெரிவித்துள்ளேன்.












Click it and Unblock the Notifications