8 தமிழர்களை கொன்ற இலங்கை ராணுவ வீரருக்கு மரண தண்டனை..15 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு…
கொழும்பு: இலங்கையில், 15 ஆண்டுகளுக்கு முன், எட்டு தமிழர்களை கழுத்தை அறுத்து படுகொலை செய்த, ராணுவ வீரர் சுனில் ரத்னநாயகேவுக்கு, மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடுமையாக சண்டை நடைபெற்ற, 2000 ம் ஆண்டில், தமிழர்கள் பகுதியான மிருசுவில் என்ற இடத்தில், விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன. அதில், தமிழர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
குண்டுவீச்சுக்குப் பிறகு, தங்களின் வீடு, என்ன கதியில் இருக்கிறது என்பதைப் பார்க்க, சிறுவர்கள் உட்பட சிலர் அங்கு சென்றனர். அவர்களை வழிமறித்த ராணுவ வீரர் சுனில் ரத்னநாயகே, நான்கு சிறுவர்கள், நான்கு பெரியவர்களை, கழுத்தை அறுத்து கொன்று, மொத்தமாக குழியில் தள்ளி மூடிவிட்டார்.
அவரது பிடியில் இருந்து தப்பிய தமிழர் ஒருவர், இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார். இதையடுத்து, இப்படுகொலை குறித்து வழக்கு தொடரப்பட்டது.
பதினைந்து ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழர்களை கொன்று குவித்த சுனிலுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் நான்கு வீரர்கள், ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டனர்.