மனைவியுடன் அமெரிக்காவுக்கு ஓடினார் பசில் ராஜபக்சே... இன்னொரு தம்பி பாங்காக் ஓட்டம்
கொழும்பு: அதிபர் பதவியிலிருந்து துரத்தப்பட்டுள்ள ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே தனது மனைவியுடன் இன்று அதிகாலை அமெரிக்காவுக்குக் கிளம்பிப் போயுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் நாளிதழின் இணையதள செய்தி தெரிவிக்கிறது.
சில தகவல்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை டெய்லி மிர்ரர் வெளியிட்டுள்ளது. கொழும்பு, காட்டுநாயகே பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தின் விஐபி பகுதி வழியாக இருவரும் போனதாக அந்த செய்தி கூறுகிறது.
பின்னர் துபாய் வழியாக லாஸ் ஏஞ்சலெஸ் செல்லும் விமானத்தில் அதிகாலை 3 மணியளவில் அவர்கள் கிளம்பிச் சென்றதாகவும் இச்செய்தி கூறுகிறது. எமிரேட்ஸ் விமானம் மூலமாக இவர்கள் போனார்களாம்.

அதேபோல அமெரிக்க குடியுரிமை பெற்றவரான இன்னொரு தம்பி டட்லி ராஜபக்சே தேர்தலுக்கு முன்பு கொழும்பு வந்திருந்தார். விமான நிலைய வளாகத்திலேயே உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரும் தற்போது கொழும்பிலிருந்து போய் விட்டார். அவர் நேற்று காலை பாங்காங் கிளம்பிச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 2 பேரும் நேற்று துபாய் கிளம்பி்ப் போனதாக டெய்லி மிர்ரர் செய்தி கூறுகிறது.
விமான நிலையத்தில் கண்காணிப்பு:
ராஜபக்சே தோல்விக்குப் பின்னரும் பல முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.
குறிப்பாக கருணா, கே.பி. என்கிற குமரன் பத்மநாபன் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications