ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்!
கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் 19வது அரசியல் சாசன திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று தாக்கல் செய்தார்.
இலங்கையில் நாடாளுமன்ற அமைப்பு முறை இருந்த போதும் ஜனாதிபதியே அதிக அதிகாரங்களைக் கொண்டவர். பிரதமர் மற்றும் நாடாளுமன்றம் என்பது பொம்மையாகத்தான் இருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி ஆட்சி முறைக்கு முடிவு கட்டுவோம் என்று மைத்ரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டோர் உறுதியளித்திருந்தனர். இதனடிப்படையில் அண்மையில் ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலான 19வது சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று தாக்கல் செய்தார். இந்த திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 ஆண்டுகாலம் என்பது 5 ஆண்டுகளாக குறைக்கப்படும்; ஒருவர் ஜனாதிபதியாக இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும்; கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 30-ஐ தாண்ட கூடாது ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மசோதா அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications