அடப்பாவமே! ஆம்புலன்ஸுக்கு கூட டீசல் இல்லை.. 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம்.. திணறும் இலங்கை!
கொழும்பு: இலங்கை நாட்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அவசர தேவைக்குக் கூட எரிபொருள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
அண்டை நாடான இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடக்கத்தில் ஆங்காங்கே மட்டும் நடைபெற்ற போராட்டம், பின்னர் நாடு முழுவதும் பரவியது. இதனால் அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.

இலங்கை
நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்தந நிலையில் இலங்கை நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். அதன் பின்னர் உலக நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெறும் முயற்சியில் இலங்கை இறங்கியது. இதற்காக இலங்கை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு குழு அமெரிக்கா சென்றும் கூட பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், பெரிய உதவிகள் கிடைத்ததாகத் தெரியவில்லை.

இந்தியா
தற்போதைய சூழலில் இந்தியா மட்டுமே இலங்கைக்கு உதவி வருகிறது. பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்யக் கூட தேவையான அந்நிய செலாவணி அங்கு இல்லை. இதனால் பெட்ரோல், டீசலை கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. இதற்கும் கூட இந்தியா தான் கடனுதவி திட்டத்தை அறிவித்து இருந்தது. இதற்கிடையே இலங்கைக்கு உதவும் வகையில் மற்றொரு கடனை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஜூலை முதல் நான்கு மாதங்களுக்கு எரிபொருள் வாங்கப் பயன்படும்.

எரிபொருள் பற்றாக்குறை
இந்தியா இந்த அளவுக்கு உதவினாலும் கூட இலங்கை நாட்டில் நிலைமை சீராகவில்லை. பெட்ரோல், டீசலுக்கு கூட மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழலே ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கூட எரிக்க முடியாத அவல சூழலே ஏற்பட்டுள்ளது. மேலும். எரிபொருள்களுக்கு ரேசன் முறையைப் பின்பற்றுவது குறித்தும் அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.

தட்டுப்பாடு
இதன் காரணமாக அங்கு வாழும் மக்கள் சொல்ல முடியாத இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். அங்கு இப்போது இருக்கும் மோசமான நிலையை விளக்கும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. டீசலை நிரப்ப அங்குள்ள ஆம்புலன்ஸ் ஒன்று சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக பெட்ரோல் பம்பில் காத்திருக்கிறது. அதன் பின்னரும் கூட ஆம்புலன்ஸுக்கு எரிபொருள் கிடைத்தா இல்லையா என்று தெளிவாகத் தெரியவில்லை.

ஆம்புலன்ஸ்
அவசரத்திற்கு உதவும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கே இந்த நிலை என்றால், அங்குச் சாதாரண மக்களுக்கு எந்த நிலை இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட எரிபொருள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இந்தியா உதவினாலும் கூட இலங்கையில் இப்போது இருக்கும் நிலைமையைச் சமாளிப்பது கஷ்டம் என்றே கூறப்படுகிறது.

இந்தியா மட்டும்
உலக நாடுகளின் உதவிகளைக் கோரினாலும் கூட இந்தியா தவிர வேறு எந்த நாடும் இலங்கைக்குப் பெரியளவில் உதவவில்லை என்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகவே அறிவித்து இருந்தார். கடந்த சில ஆண்டுகளாகச் சீனா உடன் நெருக்கம் காட்டி வந்தது. இருப்பினும், இக்கட்டான நிலையில் சீனா உதவாமல் கைவிரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நிலை
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனது அரசியல் வாழ்க்கையில் மிகக் கடினமான போராட்டத்தில் உள்ளார். இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் இலங்கைக்கு உலக வங்கி 700 மில்லியன் டாலர் கடனை வழங்கியிருந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தால் மட்டுமே நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications