ராணுவ விமானத்தில் கோத்தபய மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்?
மாலே: அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவரது தம்பியான கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டே தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜபக்சே மந்திரி சபையில் ஊரக வளர்ச்சி துறை மந்திரியாகவும் பாதுகாப்புத்துறை செயலராகவும் பதவி வகித்தா கோத்தபய, ராணுவ விமானத்தில் மாலத் தீவுகளுக்கு தப்பியதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபராக பதவி வகித்த ராஜபக்சே படுதோல்வியைச் சந்தித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மைத்ரிபால் சிறிசேனா வெற்றி பெற்று நேற்று இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செயலராக பதவி வகித்த கோத்தபய ராஜபக்சேவும் அவரது மனைவி அயோமாவும் தேர்தல் முடிவு வெளியானவுடன் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் தப்பி ஓடிவிட்டதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் சென்றால் விசா தேவையில்லை. எனினும் விசா இல்லாமல் சிங்கப்பூர் அரசு அவருக்கு அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில், ராஜபக்சேவின் மகன்கள் சீனாவுக்கு சென்று விட்டனர். ராஜபக்சேவின் இன்னொரு தம்பி அமெரிக்காவுக்குப் பறந்துவிட்டார்.
மாலத் தீவு மறுப்பு
இதற்கிடையில், கோத்தபய ராஜபக்சே தங்கள் நாட்டுக்கு தப்பி வந்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என மாலத்தீவி மறுப்பு தெரிவித்துள்ளது.