இலங்கை வடமாகாணத்துக்கு முதல்வர் கிடைக்க இந்தியாவே காரணம்: தூதரக அதிகாரி பேச்சு
கொழும்பு: இலங்கையின் வட மாகாணத்தில் ஒரு முதல்வர் அமைய இந்தியாதான் முக்கிய பங்காற்றியது என்று யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதரக அதிகாரி வெங்கடாசலம் மகாலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் அதிகாரியான வெங்கடாசலம் மகாலிங்கம் பணியிடமாற்றம் அடைந்துள்ளார். இதற்கான பிரிவுபச்சார நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
வடமாகாணத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் பிரமுகர்கள் ஆட்சி செய்கின்றார்கள் என்றால் அதற்கு இந்தியாதான் காரணம். தமிழ் மக்களின் ஆதங்கத்தின் அடிப்படையில்தான் இந்தியா 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படையை இங்கே அனுப்பியது. இந்தியப்படை இங்கே வரும்போது அதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது என்பதையும் இந்திய அமைதிப்படை வந்த மூன்று மாத காலப்பகுதியில் இங்கே என்ன நடந்தது என்பதையும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை.
இந்திய அமைதிப்படை என்ன தீர்வு காண வந்தார்களோ அதை நடக்க விடாமல் செய்ததற்கு இந்திய அமைதிப்படையோ இந்திய அரசாங்கமோ காரணம் அல்ல. வடமாகாண தேர்தலை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கமே நிர்ப்பந்தித்தது. இந்தியாவில் சென்றுதான் வடமாகாண தேர்தல் தேதியையும் குறித்தார்கள்.
ஐ.நா மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்க பல காரணங்கள் உண்டு. ஆனால் அவை எல்லாவற்றையும் இங்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஒரு நாட்டுக்கு வெளியில் இருந்து அழுத்தம் கொடுப்பது என்பது இந்திய வெளியுறவு கொள்கையில் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாதது. ஆகவேதான் இந்தியா அவ்வாறான சந்தர்ப்பம் வரக்கூடாது என்று தீர்மானத்தினைப் புறக்கணித்தது.
அவ்வாறு புறக்கணித்ததன் காரணமாகத்தான் இந்தியா, இலங்கை அரசாங்கத்துடன் உட்கார்ந்து பேச முடிகிறது. இந்தியாவும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து மூன்றாவது திருத்தத்தில் பங்கேற்று இருந்தால் இந்தியா கண்டிப்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி தமிழர்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய சந்தர்ப்பத்தினை இழந்திருக்கும். ஆகவேதான் இந்தியா அந்த தீர்மானத்தை புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டி வந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications