ஈழத் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் ரயில் முன்பாய்ந்து மாணவர் தற்கொலை
யாழ்ப்பாணம்: இலங்கை சிறையில்வாடும் ஈழத் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மாணவர் ஒருவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை சிறையில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்று மைத்ரிபால அரசு உறுதிமொழி அளித்தது. ஆனால் இந்த உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை.
இதனைக் கண்டித்து முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் தமிழர் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ராஜேஸ்வரன் செந்தூரன், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த குறிப்பில் "தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு" "ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்" என் அவர் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் ஈழத் தமிழரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.