இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: "சிறப்பான" தோல்வியை ஒப்புக் கொள்வதாக மகிந்த ராஜபக்சே அறிவிப்பு!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகிவிடலாம் என்று கனவு கண்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கனவு தவிடுபொடியாகிவிட்டது. இத்தேர்தலில் சிறப்பான தோல்வியைத் தழுவி இருப்பதாக மகிந்த ராஜபக்சே கூறியுள்ளதாக ஏ.எஃப்.பி. ஏஜென்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 70% வாக்குகள் பதிவாகி இருந்தன. இத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று பிற்பகலுக்குள் முழுமையாக முடிவுகள் தெரிந்துவிடும்.
தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி வருகிறது. இத்தேர்தலின் முடிவுகள் அதிகாரப்பூரமாக முழுமையாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் தாம் சிறப்பான தோல்வியை அடைந்துள்ளதாக ஏ.எஃ.ப்.பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேடியில் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மகிந்த ராஜபக்சே கூறுகையில், மொத்தம் உள்ள 22 மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி 11 மாவட்டங்களில் வென்றுள்ளது. எங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8 மாவட்டங்களில்தான் வென்றுள்ளது. பிரதமராகும் கனவு நிறைவேறவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை தேர்தல் ஆணைய முடிவுகளின் படி எஞ்சிய 3 மாவட்டங்களில் தமிழ்க் கட்சிகள் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Mahinda Rajapaksa hasn’t yet received official final results of #GenElecSL to accept victory or concede defeat. #SriLanka
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) August 18, 2015
குழப்பும் ட்விட்டர்
அதாவது ராஜபக்சேவின் பிரதமர் கனவு தவிடு பொடியாகிவிட்டது என்கிறது இலங்கை வட்டாரங்கள். இருப்பினும் மகிந்த ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலோ, தேர்தல் வெற்றி, தோல்வி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ நிலையையும் ராஜபக்சே தெரிவிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.