7 தமிழர் விடுதலை: இலங்கையில் 10 லட்சம் கையெழுத்துகளை திரட்டுகிறார் முருகனின் தாயார்!
கிளிநொச்சி: ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி இலங்கையில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்துகளை திரட்டி பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாக ஆயுள் தண்டனைக் கைதி முருகனின் தாயார் சோமினி கூறியுள்ளார்.
ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், முருகன் உட்பட 7 தமிழர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். அவர்களை மாநில அரசு விடுதலை செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதனால் தமிழக அரசு தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சியில், தமிழக சிறையில் உள்ள 7 தமிழர்களில் ஒருவரான முருகனின் தாயார் சோமினி கூறியதாவது:

என் மகன் உள்பட 7 பேர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கொடிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உலக தலைவர்கள் மன்னித்ததற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உள்ளன. அதுபோல், என் மகனுக்கும் கருணை காட்டப்படும் என்று நம்புகிறேன்.
அதற்காக என் மகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி, இலங்கையில் கையெழுத்து பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். 10 லட்சம் கையெழுத்துகளை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளேன்.
இந்த கையெழுத்துகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு சோமினி கூறினார்.












Click it and Unblock the Notifications