சிறிசேனாவிடம் மோடியைப் பார்க்கிறேன்... ராஜகோபாலன்
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிறிசேனா, இந்தியப் பிரதமர் மோடி போன்றவர் என்பதால் இருநாட்டு வர்த்தக மற்றும் பாதுகாப்பு உடன்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என அந்நாட்டு மூத்த தமிழ் பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை விட அதிக வாக்குகள் பெற்று அவரது எதிர்ப்பாளரான மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றுள்ளார். இதனால் அங்கு புதிய ஆட்சி அமைய இருக்கிறது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக இலங்கையின் மூத்த தமிழ் பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :-
இந்தியாவில் காங்கிரசின் பரம்பரை ஆட்சிக்கு எதிராக எப்படி மக்கள் ஓட்டளித்தார்களோ அதே போன்று இலங்கையிலும் நிலையான அரசு அமைவதற்காக இலங்கை மக்கள் ஓட்டளித்துள்ளனர். இது இலங்கை மக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு கிடைத்த விடுதலை.
தமிழர்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள். இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள சிறிசேனா, இந்திய பிரதமர் மோடியை போன்றவர். அதனால் இந்தியா-இலங்கை இடையேயான வர்த்தக மற்றும் பாதுகாப்பு உடன்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என நினைக்கிறேன்.
கடந்த 30 வருட கால இலங்கை அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவன் என்ற அடிப்படையில் நிச்சயம் மோடியைப் போல வலுவான தலைவராக சிறிசேனா உருவெடுப்பார் என்று திடமாக நம்புகிறேன்.
மக்கள் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். இது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் எ்ன்று நம்புகிறேன். புதிய அரசு அமைப்பதில் தமிழர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கும்.
தமிழக மீ்னவர் பிரச்சினை உள்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சிறிசேன சுமூகத் தீர்வு காண்பார் என்று நம்புகிறேன். இதன் மூலம் இரு நாட்டு உறவும் வலுப்படும்.
சிறிசேன எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர். அதற்கு முன்பு அவரை யாருக்குமே தெரியாத நிலைதான் இருந்தது. ஆனால் திடீரென்று அவர் எழுச்சி பெற்றுள்ளார். மிக வலுவான அதிபராக உருவெடுத்துள்ளார். இதற்கு முக்கியக் காரணம், ராஜபக்சே மீது அனைவருக்கும் அந்த அளவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு விட்டதுதான்.
இந்திய அரசுகளைப் பொறுத்தவரை 1996ம் ஆண்டு முதலே இலங்கை தொடர்பான இந்திய அரசுகளின் கொள்கை மிகவும் மோசமாகவே இருந்தது. குறிப்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் கொள்கை மிகவும் மோசம்' எனத் தெரிவித்துள்ளார் ராஜகோபாலன்.