சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் விசா வழங்க மறுத்தது அமெரிக்கா!
கொழும்பு: இலங்கை முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவுக்கு 2-வது முறையாக விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான மோதலில் 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே, ராணுவ தளபதி சரத்பொன்சேகாதான் காரணம்.
இவர்களை போர்க்குற்றவாளிகளாக பிரகடனம் செய்து தண்டனை வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இந்த நிலையில் தற்போதைய மைத்ரிபால சிறிசேன அரசில் அமைச்சராக்கப்பட்டுள்ளார் சரத்பொன்சேகா.
அமெரிக்காவில் உள்ள மகள்களைப் பார்ப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொன்சேகா விசா கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது விசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்தது. இந்த நிலையில் மீண்டும் அமெரிக்கா செல்ல சரத்பொன்சேகா விசா கோரியிருந்தார்.
ஆனால் 2-வது முறையாகவும் அமெரிக்கா, சரத் பொன்சேகாவுக்கு விசா வழங்க மறுத்திருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.