ராஜபக்சேவை எதிர்க்கும் நிதி அமைச்சர் பொதுக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு; பெண் பலி- 12 பேர் காயம்!
கொழும்பு: இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பெண் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிபர் மைத்ரிபால, பிரதமர் ரணில் விக்கிரம்சிங்கே ஆகியோர் தீவிர பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நிதி அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருமான் கருணாநாயக்கவும் மகிந்த ராஜபக்சேவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் கொழும்பு கொட்டாஞ்சேனை ப்ளூமெண்டல் பிரதேசத்தில் ரவி கருணாநாயக்க இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அவர் தேர்தல் பிரசாரத்தை முடித்து புறப்பட்ட சில நிமிடங்களில் மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பெண் ஒருவர் பலியாகி உள்ளனர். 12 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? ரவி கருணாநாயக்கவை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications