சுதந்திர தினவிழாவில் சிறிசேனவை கொல்ல ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சி... திடுக் தகவல்கள்!
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சுதந்திர தின அணி வகுப்பு மரியாதையின் போது கொலை செய்ய சதித்திட்டம் நடந்துள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இலங்கையில் கடந்த 4ஆம்தேதி, அந்நாட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த விழாவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மிக எளிமையாகவும், விரைவாகவும் சுதந்திர தின விழா நடத்தி முடிக்கப்பட்டது.
சுதந்திர தின விழாவின் போது அதிபர் மைத்திரி பால சிறிசேன உட்பட முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இதனையடுத்தே பலத்த பாதுகாப்புடன் எளிமையாக விழா நடத்தி முடிக்கப்பட்டதாகவும் தற்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்கள்
1981ஆம் ஆண்டு எகிப்து ஜனாதிபதி அன்வர்சதாத் அந்நாட்டு ராணுவ அணிவகுப்பை பார்த்தபோது ராணுவ வீரர்களில் சிலர் தங்கள் வாகனங்களில் இருந்து திடீரென்று குதித்து அன்வர் சதாத்தை சுட்டுக்கொன்றனர்.
அணிவகுப்பில் மாற்றம்
இதை தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யு.டி. பஸ் நாயக்க சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை முற்றிலுமாக மாற்றி அமைத்தார். அதோடு அணிவகுப்பில் இடம் பெறும் வீரர்களிலும் கடைசி நிமிட மாற்றங்களை செய்தார்.
குண்டு துளைக்காத உடை
அது மட்டுமின்றி சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட சிறிசேனாவை குண்டுகள் துளைக்காத சிறப்பு மேலாடை அணிந்து வரச்செய்தார். சிறிசேனாவுக்கு 5 அடுக்கு பாதுகாப்பையும் அவர் கொடுத்தார்.
பாதுகாப்பு செயலாளர் செய்த இந்த அதிரடி மாற்றங்களால் சிறிசேனா உயிர் தப்பினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்களை சண்டே டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
மாற்றப்பட்ட திட்டம்
அதிபர் சிறிசேனா சுதந்திர தின விழாவை எளிமையாக கொண்டாட தீர்மானித்ததை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு பணிகளும் சுலமானதாக கூறப்படுகிறது.
மேலும் முந்தைய அரசு, ராஜபக்சவின் சொந்த ஊரான வீரக்கெட்டியவில் இம்முறை சுதந்திர தினத்தை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, அந்த திட்டதை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.