மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கண்டிப்பாக பங்கேற்பார்: இலங்கை அரசு அறிவிப்பு
கொழும்பு: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே நிச்சயம் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது. இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி வரும் 26ம் தேதி இந்தியாவின் 14வது பிரதமராக பதவி ஏற்கவிருக்கிறார். முன்னதாக புதன்கிழமை அவர் தனது குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இலங்கை அதிபர் ராஜபக்சே மோடியின் பதவியேற்பு விழாவில் நிச்சயம் கலந்து கொள்வார் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. பதவி ஏற்பு விழாவிற்கு ராஜபக்சேவை மோடி அழைத்ததற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.